ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து திடீரென அதிகரிப்பு, விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து திடீரென அதிகரித்து வினாடிக்கு 2500 கன அடியாக நீடித்து வருகிறது.

Update: 2024-03-13 05:11 GMT

ஒகேனக்கல் அருவி  கோப்புப்படம் 

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக கர்நாடகா எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து வினாடிக்கு கடந்த 3 மாதங்களாக மிக குறைந்த அளவிலே நீர்வரத்து வந்து கொண்டிருந்தது .

நீர்வரத்து அவ்வப்போது அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்த நிலையில் கடந்த 17 நாட்களாக நீர்வரத்து 200 கன அடியாக நீடித்து வந்தது. குறைந்த அளவு தண்ணீர் வந்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஆங்காங்கே தண்ணீர் இல்லாமல் வறண்டு, வெறும் பாறைகளாகவே காட்சி அளித்தது.

ஆற்றில் தண்ணீர் இல்லாததால் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்தது. இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நீரானது புதன்கிழமை காலை தமிழக,கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.

செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 200 கன அடியாக இருந்த நீர்வரத்து புதன்கிழமை காலை 7 மணி நிலவரப்படி விநாடிக்கு 5,000கன அடியாக அதிகரித்தது. காவிரி ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவிகளில் நீர் வரத்து சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தின் அளவானது 8 மணி நிலவரப்படி திடீரென குறைய தொடங்கிய நிலையில் விநாடிக்கு 2500 கன அடியாக நீர்வரத்து மீண்டும் சரிந்துள்ளது. இந்த நிலையில் தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து திடீரென அதிகரித்து வினாடிக்கு 2500 கன அடியாக நீடித்து வருகிறது.

இதனால் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டி செல்கின்றன. இந்த நீர்வரத்தானது மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்து, ஒரு மணி நேரத்திற்குள்ளாக மீண்டும் குறைந்துள்ளதால் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்து அளவுகளை மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த நீர்வரத்தால் தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு வழங்கக்கூடிய ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்படும்.

அதேபோல டெல்டா பாசன விவசாயிகளும் பயனடைவார்கள் என கருதப்படுகிறது. 

Tags:    

Similar News