மீன் விற்பனை நிலையங்களில், உணவு பாதுகாப்பு சான்றிதழ் எடுக்காவிட்டால் அபராதம்

உணவு பாதுகாப்பு சான்றிதழ் உடனடி அபராதம் ஐந்தாயிரம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-29 13:48 GMT

மீன் கடையில் ஆய்வு மேற்கொள்ளும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள்

தர்மபுரி மாவட்டம் முழுதும் உள்ள மீன் விற்பனை மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர் சாந்தி பரிந்துரைத்துள்ளார்.

அதன் அடிப்படையில் தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானு சுஜாதா மற்றும் மீன் வளத்துறை உதவி இயக்குனர் கோகுல ரமணன் வழிகாட்டலின் படி, பாலக்கோடு மீன் மார்க்கெட் பகுதிகளில் உள்ள மீன் விற்பனை நிலையங்களில், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் மீன்வளத்துறை சார் ஆய்வாளர் வெங்கடேசன், மீன்வள பாதுகாவலர் முருகன் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது பத்துக்கும் மேற்பட்ட கடைகளில் மீன்கள் பார்வையிட்டு இருப்பு மற்றும் விற்பனைக்கு வைத்திருந்த திலேபியா, ரோக், ரூப்சந்த், மிருதுளா மீன்கள் என அனைத்து வகையான மீன்களையும் ஆய்வு செய்தனர்.

மேலும் மீன்கள் நீண்ட நாள் கெடாமல் இருக்க, மீன்களில் பார்மலின் உபயோகப் படுத்தப்பட்டு இருக்கிறதா என பார்மலின் டெஸ்ட் கிட் உபகரணம் கொண்டு ஆய்வு செய்தனர். வெளி மாநில (ஆந்திரா) மீன் மற்றும் உள்ளூர் மீன்களை ஆய்வு செய்தனர். ஆய்வில் பார்மலின் ஏதும் கலந்து விற்பனை செய்யப்படவில்லை என அறியப்பட்டது.

இரண்டு கடைகளில் இருந்து மட்டும் தரம் குறைவான மீன்கள் சுமார் 20 கிலோ அளவில் பறிமுதல் செய்யப்பட்டு, அப்புறப்படுத்தி பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. மேலும் அந்த கடைக்காரர்களுக்கு தலா ரூ.1000 விதம் அபராதம் விதிக்கப்பட்டது.

இது தவிர உணவு பாதுகாப்பு உரிமம் ஒரு சில கடைகள் மட்டும் பெற்றுள்ளனர். எடுக்காதவர்கள், புதுப்பிக்காதவர்கள் 7 தினங்களுக்குள் விண்ணப்பிக்க வலியுறுத்தப்பட்டது. உணவு பாதுகாப்பு சான்றிதழ் எடுக்காவிடில் உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் படி உடனடி அபராதம் ஐந்தாயிரம் விதிக்க மாவட்ட நியமன அலுவலர் உத்தர விட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தெரிவித்தார்.

மேலும் இந்த ஆய்வுகள் மாவட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக உணவு பாதுகாப்பு மற்றும் மீன்வளத்துறை அலுவலர்கள் அலுவலர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News