தீபாவளியையொட்டி களை கட்டியது கடலூர் மாவட்டம் வேப்பூர் ஆட்டுச் சந்தை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்டம் வேப்பூர் ஆட்டுச்சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகி களை கட்டியது.

Update: 2021-10-29 15:38 GMT

கடலூர் மாவட்டம்  வேப்பூர் ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விற்பனை விறு விறுப்பாக நடந்தது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள வேப்பூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம்.வேப்பூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள் கூடுதல் வருமானத்திற்காக ஆடு வளர்ப்பதை தொழிலாக செய்து வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் வெள்ளாடு, செம்மறி ஆடு, கொடி ஆடுகளை வார சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த ஆடுகளை வாங்குவதற்காக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆடுகளை வாங்கி சென்றனர்.

ஒரு ஆட்டின் விலை ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை விற்பனை ஆனது. அதிகாலை 4 மணி முதல் 8 மணி வரை 4 ஆயிரம்  ஆடுகளுக்கு மேல் விற்பனை ஆனது.  4 கோடி ரூபாய் அளவுக்கு வரை வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் வார சந்தைக்கு ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருபவர்களிடம் இது நாள் வரை ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் ஒரு ஆட்டிற்கு தலா 30 ரூபாயை வசூல் செய்து கொண்டிருந்தனர்.


இன்று நடைபெற்ற வாரச்சந்தையில் ஊராட்சி மன்ற நிர்வாகம் ஒரு ஆட்டிற்கு தல 60 ரூபாய் என வசூல் செய்ததாகவும் ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட ரசீதியில் ஆடுகளின் எண்ணிக்கையை மட்டும் எழுதப்படுவதாகவும் வசூலிக்கப்படும் தொகையை எழுதாமல் ஊராட்சி மன்ற நிர்வாகம் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் வாரச்சந்தை நடைபெறும் இடத்தில் குடிநீர், கழிவறை போன்ற எந்த அடிப்படை வசதியும் செய்து தராமல் ஊராட்சி மன்ற நிர்வாகம் உள்ளதாகவும், அதிகாலை 4மணியிலிருந்து 8 மணிவரை சந்தைக்கு ஆடுகள் 5000ஆடுகளுக்கு மேல் வந்த நிலையில் ஊராட்சி நிர்வாகம் முறையாக ரசீது வழங்காமல் பாதி ஆடுகளுக்கு மேல் ரசீது வழங்காமல் தொகையை வசூல் செய்வதாகவும் குற்றம் சாட்டினர்.

Tags:    

Similar News