வடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீரின்றி தவிக்கும் நோயாளிகள்

வடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரின்றி நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.

Update: 2021-11-25 03:31 GMT

வடலூர் ஆரம்ப சுகாதார நிலையம்.

கடலூர் மாவட்டம் வடலூரில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது இங்கு குறிஞ்சிப்பாடி வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகள் மட்டுமல்லாமல் நெய்வேலி மற்றும் கங்கைகொண்டான் பேரூராட்சி வரையில் உள்ள கர்ப்பிணிகள் குழந்தை பெற்ற தாய்மார்கள் வரை சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் செய்து வருகிறார்கள்.

இதனால் கர்ப்பிணிப் பெண்கள் அவர்களை அழைத்து வரும் பொதுமக்கள் புறநோயாளிகள் உட்பட நாளொன்றுக்கு ஆயிரம் நபருக்கு அதிகமாக வந்து செல்கின்றனர். மேலும் வட்டார மருத்துவ அலுவலரின் அலுவலகம் வட்டார பொது சுகாதார மையம் உள்ளிட்ட பல அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இங்கு பொதுமக்களுக்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் வைக்கப்பட்டு அதன்மேல் உபயோகத்தில் இல்லை என்ற வாசகம் அச்சிடப்பட்ட அறிவிப்பு நோட்டீஸ் மட்டும் அடிக்கடி புதிதாக ஒட்டப்படுகிறது.  பல மாதங்களாகவே இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் சரி செய்யப்படாமல் உள்ளதாகவும் இங்கு வந்து செல்லும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குடிநீருக்காக எந்த ஒரு வசதியும் செய்து தரப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

மேலும் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் குடிநீர் இல்லாமல் பாட்டில் ஒன்று 20 ரூபாய் என வெளியில் உள்ள கடைகளில் வாங்கி பயன்படுத்தி வருவதாகவும் கூறுகின்றனர். சம்பந்தப்பட்ட துறையினர் இதை உடனடியாக சரி செய்து பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News