தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு

கடலூர் மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் வருகிற 20-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-15 04:09 GMT

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், மங்களூர் மற்றும் நெய்வேலி ஆகிய பகுதியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பயிற்சியாளர்கள் சேர்க்கை இணையவழிக் கலந்தாய்வு மூலம் நடைபெற உள்ளது. இதற்காக www.skilltraining.tn.gov.inஎன்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க கால அவகாசம் வருகிற 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாணவ-மாணவிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரலாம். மேலும் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலைங்களில் உள்ள தொழிற்பிரிவு விவரங்களை இணையதள முகவரி மூலமாக அறிந்து கொள்ளலாம்.

மாணவர்களின் விண்ணப்பங்கள் அடிப்படையில் மதிப்பெண் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை, இதே இணையதளத்தில் வெளியிடப்படும். தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோரும் ரூ.750 உதவித்தொகை மற்றும் விலையில்லா சைக்கிள், புத்தகம், காலணி, சீருடை, வரைபடக் கருவிகள் ஆகியவை வழங்கப்படுகிறது.

பயிற்சி முடித்து தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு (மின்சாரப் பணியாளர் மற்றும் பொருத்துனர் பிரிவு) சுய வேலை வாய்ப்பு மேற்கொள்ள கைகருவிகள் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது.

மாறிவரும் தொழிற்சாலைகளின் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு முன்னணி தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தொழில்நுட்ப மையங்களாக உயர்த்தப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் பயிற்சியின் போதே பிரபல தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் பயிற்சி, உதவித்தொகையுடன் வழங்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்.

எனவே மாணவ-மாணவிகள் இணையதள வழியிலான கலந்தாய்வில் கலந்து கொண்டு, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை 04142 - 290273 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News