குடியிருப்பு அருகில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்த்து போராட்டம்

குடியிருப்பு அருகில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-06-24 07:30 GMT

சென்னை வேளச்சேரி அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தினர்.

சென்னை வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 7வது தெருவில் வசித்து வருபவர் பாண்டுரங்கன்(53), இவர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டின் பின்புறம் காலியாக உள்ள இடத்தில் செல்போன் கோபுரம் அமைப்பதற்காக தனியார் செல்போன் நிறுவனத்திற்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

அதன் காரணமாக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு செல்போன் நிறுவனம் செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டது.இதற்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் நல சங்கத்தைச் சார்ந்த நிர்வாகிகள் வீட்டிற்கு அருகில் இதுபோன்ற கோபுரம் அமைப்பது மூலம் பாதிப்பு ஏற்படக்கூடும் என கூறி போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காமல் கோபுரம் அமைக்கும் பணியானது நடைபெற்று வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் இன்று அவரது வீட்டின் முன்பு கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் தகவலறிந்து வந்த வேளச்சேரி காவல்துறையினர் குடியிருப்புவாசிகளிடம்  பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்தினர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News