திருவொற்றியூரில் ராட்சத கடல் அலையில் சிக்கி 4 பேர் மரணம்

ஒரே நாளில் கடல் அலையில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-05-17 14:30 GMT

பைல் படம்

 திருவொற்றியூரில் ராட்சத கடல் அலையில் சிக்கி 3 மாணவர்கள் உள்ளிட்ட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவொற்றியூர் சதானந்தபுரத்தை சேர்ந்தவர் ஹரிஷ் (16), தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் (19) சந்துரு (20) ஆகிய இருவரும் கல்லூரி ஒன்றில் படித்து வருகின்றனர். செவ்வாய்க்கிழமை பிற்பகல் மூவரும் நண்பர்கள் சிலருடன் திருவொற்றியூர் தாங்கல் அருகே உள்ள கடற்கரையில் குளித்துள்ளனர்.
அப்போது திடீரன ஏற்பட்ட ராட்சத அலையில் 3 பேரும் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதில் ஹரிஷ், ஸ்ரீகாந்த் ஆகிய இருவரை அப்பகுதி மீனவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டாலின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக இறந்து போயினர். சந்துருவை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் புதன்கிழமை காலை திருவொற்றியூர் குப்பம் அருகே சந்துருவின் சடலம் கரை ஒதுங்கியது.

மற்றொரு சம்பவம்:

திருவொற்றியூர் பூங்காவனபுரம் நாலாவது தெருவை சேர்ந்த முகமது அலி ஜின்னா (50) என்பவர் புதன்கிழமை அதிகாலையில் கடற்கரையில் நடந்து சென்றுள்ளார். அப்போது ராட்சத அலையில் சிக்கிய அவர் கடலில் மூழ்கி இறந்து போனார். இச்சம்பவங்கள் குறித்து திருவொற்றியூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நான்கு பேரின் சடலங்களும் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்ற பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரே நாளில் கடல் அலையில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

Similar News