திருக்கோவில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கிய முதல்வருக்கு நன்றி
பதவியேற்ற புதிய அரசு ஆறு மாதத்திற்குள்ளாகவே எங்கள் கோரிக்கையை நிறைவேற்றித் தந்துள்ளதற்கு நன்றி தெரிவிப்பதாக கூறினர்;
பொங்கல் கருணைக்கொடையை உயர்த்தி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து திருக்கோயில் பணியாளர்கள் சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
தமிழகத்திலுள்ள திருக்கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைக்கொடையை ஆயிரம் ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாகவும் அகவிலைப்படியை 17 சதவீதத்திலிருந்து 31 சதவிகிதமாகவும் உயர்த்தி தமிழக முதல்வர் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
இதனையடுத்து, தமிழ்நாடு திருக்கோயில் பணியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை புளியந்தோப்பு சூளை அங்காளம்மன் கோவிலில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு திருக்கோயில் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் முத்துசாமி, மாநில துணைத்தலைவர் தனசேகர், மாநில இணைப் பொதுச் செயலாளர் ரமேஷ், சென்னை பொருளாளர் குகன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர், மாநில துணைத்தலைவர் தனசேகர் செய்தியாளரிடம் பேசியதாவது: கடந்த பல வருடங்களாக பொங்கல் கருணைத் தொகையை உயர்த்தவும் அகவிலைப்படியை உயர்த்தவும் நாங்கள் கோரிக்கை வைத்து வந்தோம். தமிழகத்தில் பதவியேற்ற புதிய அரசு, ஆறு மாதத்திற்குள்ளாகவே எங்கள் கோரிக்கையை நிறைவேற்றித் தந்துள்ளது. தமிழ்நாடு திருக்கோயில் பணியாளர்களுக்கு இது உண்மையிலேயே ஒரு தித்திப்பான பொங்கல் பண்டிகை ஆகும். தமிழக முதல்வருக்கும் இந்து சமய அறநிலை துறை அமைச்சருக்கும் எங்களது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் அவர்.