மாணவ, மாணவிகளுக்கு தன்னம்பிக்கை அவசியம்:முதல்வர் ஸ்டாலின் சென்னையில் பேச்சு

தமிழகத்திலுள்ள பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தன்னம்பிக்கை என்பது மிக மிக முக்கியம். தன்னம்பிக்கையோடு கற்றல்தான் வாழ்வில் முன்னேற்றத்தை தரும் என முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.

Update: 2022-07-27 10:02 GMT

சென்னை:

மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை வந்து விட்டால் படிப்பு தானாக வந்து விடும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். கல்விக்கூடங்கள் மதிப்பெண் கூடங்களாக மட்டுமே இருக்கக் கூடாது, மாணவர்களின் மதிப்பை உயர்த்தும் இடங்களாக கல்வி நிறுவனங்கள் இருக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மாணவ, மாணவிகளின் உடல்நலம், மனநலம் ஆரோக்யமாக இருந்தால்தான் தன்னம்பிக்கையோடு பயின்று நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். தமிழகத்திலுள்ள பள்ளி, கல்லுாரிகள் அனைத்துமே மதிப்பெண் கூடங்களாக இல்லாமல் மாணவ, மாணவிகளின் மதிப்பை உயர்த்தும் இடங்களாக இருக்கவேண்டும் எனவும் அதற்கு ஆசிரிய, ஆசிரியைகள் உறுதுணையோடு இருக்க வேண்டும் என தெரிவித்தார். .

சென்னை அசோக்நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு உடல்நலம், மனநலம் சார்ந்த விழிப்புணர்வு ஊர்தியை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்த விழாவில் முதல்வருடன் பள்ளிக்கல்வி்துதுறை அமைச்சர் அன்பில் மகேஷ்,சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,அமைச்சர் சேகர்பாபு சென்னை மேயர் பிரியா,.பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லால் உஷா, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காலை உணவு அவசியம்

அசோக்நகர் பள்ளி விழாவில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி அவசியம் என்று தெரிவித்தார். காலை உணவை சாப்பிடாமல் பள்ளிக்கு வரக்கூடாது. பல மாணவர்கள் காலை உணவு சாப்பிடுவதை தவிர்த்து விடுகின்றனர். காலையில் அதிகமாகவும் பிற்பகலில் நிதானமான அளவிலும் இரவில் குறைவாகவும் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கின்றனர். ஆனால் பல மாணவ மாணவிகள் பள்ளிக்கு வரும் அவசரத்தில் காலை உணவை தவிர்த்து விடுகின்றனர் என்றார்.

விழிப்புணர்வு

மருத்துவக் குழுவினர் அடங்கிய 805 விழிப்புணர்வு வாகனங்கள் மூலம் பள்ளிகளுக்கு சென்று, மாணவ,மாணவிகளுக்கு மனநலம், உடல்நலம் குறித்து விழிப்புணர்வு தரப்பட உள்ளது. தேர்வு அச்சம், மன ரீதியான அழுத்தங்களை எதிர்கொள்ள தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட இருக்கிறது. பள்ளிகளில் மருத்துவ முகாம் நடைபெறும் போது மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் குறும்படங்களும் வெளியிடப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோராக சொல்கிறேன்

மாணவர்களுக்கு இந்த வயதில் என்ன கவலை இருக்கப்போகிறது? நன்றாக சாப்பிடுங்கள், உடலை கவனித்துக்கொள்ளுங்கள், நன்றாக படியுங்கள். இதைத்தவிர உங்களுக்கு வேறு என்ன கவலை இருக்கப்போகிறது. முதல்வராக மட்டுமல்ல தாயாக, தந்தையாக பெற்றோராக இதை நான் உங்களுக்கு சொல்கிறேன்..

அரசாணையில் கையெழுத்து

1 முதல் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்திற்கான அரசாணையில் கையெழுத்திட்டு இருப்பதாகவும் முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை அசோக்நகர் பற்றி சிறப்பான பள்ளி திறமையான ஆசிரியர்கள் இந்த பள்ளியில் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News