வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்த ஐ டி ஊழியர் கைது
வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்த ஐ டி ஊழியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;
சென்னை கொடுங்கையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகளாக இளைஞர்கள் பயன்படுத்துவதாக கொடுங்கையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் கொடுங்கையூர் போலீசார் நேற்று மதியம் கொடுங்கையூர் எருக்கஞ்சேரி சிக்னல்அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபர் ஒருவரை கொடுங்கையூர் போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது அவரது பேண்ட் பாக்கெட்டில் வலி நிவாரண மாத்திரைகள் சில இருந்தன இதையடுத்து அவரிடம் விசாரணை செய்ததில் அந்த நபர் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் வயது 27 என்பதும் அவர் வலி நிவாரண மாத்திரைகளை மொத்தமாக வாங்க வந்து காத்துக் கொண்டிருந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் அங்கு மறைந்து இருந்து வலி நிவாரண மாத்திரைகள் விற்க வந்த நபரை மடக்கிப் பிடித்தனர் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் கொடுங்கையூர் பாப்பாத்தி அம்மா கோவில் தெரு பகுதியை சேர்ந்த நித்தியானந்தம் வயது 25 என்பதும் இவர் எண்ணூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
இவரிடம் 150 வலி நிவாரண மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர் போலீசாரின் விசாரணையில் நித்யானந்ததின் நண்பர் கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் தனியார் மருந்து கம்பெனியில் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வந்ததும் அவரிடமிருந்து நித்தியானந்தம் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி மற்ற நண்பர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்று வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது
இதனையடுத்து நித்தியானந்தம் மீது வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் மேலும் அவரது நண்பர் சதீஷ் என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.