தனியார் பால் விலை ஏற்றத்தை அரசு தடுக்க வேண்டும்: பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை
தனியார் பால் நிறுவனங்கள் கடந்த சில தினங்களுக்கு முன் பால் தயிர் விலையை லிட்டருக்கு ரூ. 2 வரை தன்னிச்சையாக உயர்த்தியுள்ளன;
சென்னையில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நல சங்கத் நிறுவனத் தலைவர் பொன்னுசாமி
தனியார் பால் விலை ஏற்றத்தை உடனடியாக தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர் நலச் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நல சங்கத்தில் சார்பில் பெரம்பூர் தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நல சங்கத் நிறுவனத் தலைவர் பொன்னுசாமி கலந்து கொண்டு பேசியதாவது: தமிழகத்தில் நாளொன்றுக்கு சுமார் 2 கோடி லிட்டர் பால் உற்பத்தி ஆகும் நிலையில் மக்களின் சராசரி தேவையில் 84 சதவீதம் வரை தனியார் பால் நிறுவனங்களும் வெறும் 16 சதவீத தேவையை ஆவின் நிறுவனம் பூர்த்தி செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சிறுசிறு தனியார் பால் நிறுவனங்கள் கடந்த சில தினங்களுக்கு முன் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு 2 ரூபாய் வரை தன்னிச்சையாக உயர்த்தியுள்ளன.
தமிழகத்தில் பெரும் பங்கு வகிக்கும் ஆந்திராவை சேர்ந்த பால் நிறுவனங்கள் அதன் பால் கொள்முதல் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக நாளை முதல் தன்னிச்சையாக இரண்டு ரூபாய் பால் விலையை உயர்த்த போவதாக தெரிவித்துள்ளனர். இதனை தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. பால் விலை உயர்வு காரணமாக பால் பொருட்கள் மற்றும் பால் சார்ந்த உணவு பொருட்கள் விலையும் உயர வாய்ப்புள்ளது
இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். பால் விற்பனை விலையை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லாத சூழலில், இந்த விலை உயர்வை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் கோடைகாலத்தில் பால் உற்பத்தி பாதிக்கப்படும்போது, கடுமையான விலை உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தனியார் நிறுவனங்கள் தன்னிச்சையாக பால் விற்பனை விலை உயர்வு விவகாரத்தில், தமிழக அரசு உடனே தலையிட்டு பால் மற்றும் தயிர் விற்பனை விலை உயர்வை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் ஆவினில் நாளொன்றுக்கு சுமார் 39 லட்சம் லிட்டர் வரை கொள்முதல் செய்யப்பட்டு அதில் 25 லட்சம் லட்சம் லிட்டர் வரை மட்டுமே பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுகிறது.
தற்போது பால் முகவர்களுக்கு பகல் நேரத்தில் பால் வினியோகம் முற்றிலுமாக நிறுத்தப்படுகின்ற ஒரு சூழலை உருவாக்கி இதன் மூலம் ஆவினில் பால் தட்டுப்பாடு ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது..எனவே இதனை எல்லாம் கருத்தில் கொண்டு ஆவினில் தங்குதடையின்றி பால் விநியோகம் நடைபெறவும் தனியார் பால் விலை உயர்வை கட்டுப்படுத்தவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மிகவும் அவசியம் என்றார் அவர்.