பெரம்பூர்: ஆட்டோ ஓட்டுனரை கத்தியால் வெட்டிய இரண்டு பேர் கைது
பெரம்பூரில் கஞ்சா புகைப்பதை தட்டிக்கேட்ட ஆட்டோ ஓட்டுனரை கத்தியால் வெட்டிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.;
சென்னை பெரம்பூர் கண்ணபிரான் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் வயது, 39. இவர், பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ சவாரி ஏற்றுவது வழக்கம். நேற்று காலை 11 மணி அளவில் ஆட்டோ ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தபோது. அடையாளம் தெரியாத இருவர் இருசக்கர வாகனத்தில் வந்து கத்தியால் சுரேஷை வெட்டினர். இதில் அவருக்கு வலது கை மற்றும் தோளில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. உடனடியாக, அருகில் இருந்தவர்கள் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக செம்பியம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கண்ணபிரான் கோவில் தெரு பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடத்தில், இளைஞர்கள் சிலர் இரு தினங்களுக்கு முன்பு கஞ்சா புகைத்து கொண்டு இருந்ததாகவும் அதனை சுரேஷ் தட்டி கேட்டதாகவும் இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இளைஞர்கள் சிலர் சுரேஷை வெட்டியதும் தெரியவந்தது.
இதனை அடுத்து பெரம்பூர் எஸ் எஸ் வி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த அப்பு என்கின்ற அமர்நாத் 21 மற்றும் பெரம்பூர் அப்பு லிங்க வாத்தியார் தெரு பகுதியை சேர்ந்த மிதுன் 21 ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும், வழக்கு பதிவு செய்த செம்பியம் போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.