தகுதி இல்லாதவர்களுக்கு அரசு வீடுகள் ஒதுக்கீடு.. அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு…

பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தில் தகுதி இல்லாதவர்களுக்கு வீடுகள் ஒதுக்கிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-12-02 14:19 GMT

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

நாடு முழுவதும் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஏழை பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இந்திரா காந்தி நினைவு குடியிருப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மத்திய அரசு மூலமும், தமிழக அரசின் மூலம் பசுமை வீடுகள் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், விதிமுறைகளில் தெரிவித்துள்ளபடி தகுதி இல்லாதவர்களுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்வதாகவும், அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில், அரியலூர் மாவட்டத்தில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஒரே பயனாளிக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும், ஏழை மக்களுக்கான இந்தத் திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கும், ஓய்வுபெற்ற அரசு ஊழியகளுக்கும் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும், அந்தப் பகுதியை சேர்ந்த சேக்ஸ்பியர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் நிதியில் மாவட்ட பஞ்சாயத்து அதிகாரிகள் கையாடல் செய்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் சேக்ஸ்பியர் அகோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் தமிழ்செல்வி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சேக்ஸ்பியர் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும், சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் செயலாளரிடம் விளக்கம் கோரி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதால், நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் பிறப்பிக்க தேவையில்லை என்றும் அரசு தரப்பில் வழக்கறிஞர் அழகு கவுதம் ஆஜராகி தெரிவித்தார்.

இதையெடுத்து, தகுதியற்றவர்களுக்கு வீடு ஒதுக்கீடு மற்றும் வேலை உறுதி திட்ட நிதியில் கையாடல் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்படுவதால், இதை தீவிரமாக கருத வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், ஊரக வளர்ச்சி துறை செயலளரை தாமாக முன்வந்து எதிர் மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டனர்.

பின்னர், சட்டவிரோதமாக வீடுகள் ஒதுக்கீடு செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என்ரு ஊரக வளர்ச்சித் துறை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் வீடு ஒதுக்கீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளின் உண்மை தன்மை குறித்து சரி பார்க்கவும், வேலை உறுதி திட்ட நிதி பயன்பாடு குறித்து ஆய்வு செய்யவும் வருவாய் கோட்டாட்சியர் அந்தஸ்திற்கு குறையாத அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதுதவிர, தமிழகம் முழுவதும் உரிய விசாரணை மேற்கொண்டு தகுதி இல்லாதவர்களுக்கு சட்டவிரோதமாக வீடுகளை ஒதுக்கிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நடைமுறைகளை 6 மாதங்களில் முடித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் ஊரக வளர்ச்சித் துறை செயலாளரிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைப்பதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News