"வேலையில்லா திண்டாட்டம் முழுமையாக ஒழிக்கப்படும்" -பல்கலை., விழாவில் முதல்வர்

சென்னை பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான ஆர்.என்.ரவியும் முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஒரே மேடையில் பங்கேற்றனர்.

Update: 2022-05-16 06:36 GMT



சென்னை பல்கலைக் கழகத்தின் 164 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று காலை 10 மணிக்கு பட்டமளிப்பு விழா தொடங்கியது. விழாவில் தமிழக ஆளுநரும், சென்னை பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆளுநர் ஆர்.என். ரவி தலைமை வகித்தார். முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். '

பின்னர் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

தமிழகத்திற்கு மட்டுமல்ல, உலகின் வளர்ச்சிக்கு உதவியவர்களை உருவாக்கியது சென்னை பல்கலைக் கழகம். அனைத்து மாணவர்களையும் முதல்வனாக்க உருவாக்கப்பட்டதுதான் 'நான் முதல்வன் திட்டம்'. இளைஞர்களுக்கு அனைத்து நலன்களையும் தமிழக அரசு செய்துகொண்டிருக்கிறது. வசதி படைத்தவர்கள் தனியார் மையங்கள் மூலம் பயிற்சி எடுத்துச் செல்கின்றனர்.

மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. நிதி பற்றாக்குறை இருந்தாலும் மாணவிகளின் நலன் கருதி தொடர்ந்து நிதி வழங்கப்படுகிறது.

மாணவர்களின் திறமை மற்றும் தகுதிக்கேற்ப சிறப்பான எதிர்காலம் அமையும். அதற்கேற்ப படிப்பும் இறுதி வரை தொடர வேண்டும். வேலைக்கு தகுந்தாற்போல் இளைஞர்கள் கிடைக்கவில்லை என்று பல நிறுவனங்கள் கூறுகின்றன. வேலைக்கு ஏற்ற தகுதிகளை இளைஞர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

மாணவர்களின் அடுத்தக்கட்ட உயர்வுக்கு பட்டம் ஓர் அடித்தளம். வேலை கிடைக்கவில்லை என்று எந்த இளைஞர்களும் குற்றம் சுமத்தாத நிலையை தமிழகம் எட்ட வேண்டும் என்று தமது உரையில் தெரிவித்தார்.

Tags:    

Similar News