முகக்கவசம் அணிந்துவந்தால் மட்டுமே சரக்கு: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே சரக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

Update: 2022-01-11 17:09 GMT

தமிழகத்தில் முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மதுபானம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பின்பற்ற வேண்டிய கொரோனா தடுப்பு நெறிமுறைகள் குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமிக்ரான் தொற்று வேகமாக பரவிவருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக வார நாட்களில் இரவு ஊரடங்கு, ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு, பொங்கல் நாட்களில் கோவிலுக்கு செல்ல தடை , திரையரங்கு, வணிக வளாகம் போன்ற இடங்களில் 50 சதவீதம் பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதேவேளையில், டாஸ்மாக் கடைகளுக்கு எவ்வித கட்டுப்பாடும் விதிக்காதது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தின. இந்நிலையில், டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பின்பற்றவேண்டிய கொரோனா தடுப்பு நெறிமுறைகள் குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, மதுபான சில்லறை விற்பனை கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டமாக இருக்கக் கூடாது. இரண்டு வாடிக்கையாளர்களுக்கு இடையே ஆறு அடி தூர சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் கடையில் அனுமதிக்கக்கூடாது.

அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தவறாது முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் மற்றும் கையுறை, கிருமிநாசினி கொண்டு கைகள் சுத்தம் செய்தல் வேண்டும். முகக் கவசம் அணிந்து வரும் நுகர்வோர்களுக்கு மட்டுமே மதுவகைகள் விநியோகிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News