கனமழையால் பாதிக்கப்பட்ட அம்பத்தூர் தொகுதியினை முதலமைச்சர் ஆய்வு செய்தார்

16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 93 மீட்டர் நீளம் கொண்ட உயர்மட்ட மேம்பாலம் அமைக்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார்.

Update: 2021-12-09 02:34 GMT

அம்பத்தூர் வடிகால் மற்றும் ஏரி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வெள்ளத்தடுப்பு பணிகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

கனமழையால் பாதிக்கப்பட்ட அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாடிக் குப்பம், கொரட்டூர் ஏரி, அம்பத்தூர் வடிகால் மற்றும் ஏரி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வெள்ளத்தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாடிகுப்பம், இரயில்நகர் தரைப்பாலம் கொரட்டூர் ஏரி மற்றும் அம்பத்தூர் வடிநீர் கால்வாய் மற்றும் ஏரி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வெள்ளத்தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, கனமழையால் பழுதடைந்துள்ள தரைபாலத்தை சீரமைத்திடவும், நெடுஞ்சாலைத் துறை மூலம் 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 93 மீட்டர் நீளம் கொண்ட உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கையை துரிதமாக மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர், கருக்கு பிரதான சாலை, DTP காலனியில் கொரட்டூர் ஏரிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வெள்ளத்தடுப்புப் பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், கொசஸ்தலையாற்று வடிநிலை பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள இரயில்வே பாதையின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் கான்கீரிட் தரைதளத்துடன் கூடிய வெள்ள தடுப்பு சுவர் அமைக்கும் பணியினை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது, மழைக் காலங்களில் அம்பத்தூர் பகுதியில் மழைநீர் தேங்காவண்ணம் உபரிநீரை கொரட்டூர் ஏரிக்குள் கொண்டு செல்ல கூடுதலாக ஒரு சிறு பாலம் அமைக்க பெருநகர சென்னை மாநகராட்சிக்கும் மற்றும் இரண்டு வெள்ள சீராக்கி (Flood Regulator) அமைக்க பொதுப்பணித் துறைக்கும் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News