அதிமுக பனிப்போருக்கு முடிவு தான் என்ன? இபிஎஸ், ஓபிஎஸ் இணைய வேண்டும்..! இணையுமா இரு கைகளும்?

ADMK News Tamil - தமிழகத்தின் பிரதான கட்சியான அதிமுகவில் தொடரும் இபிஎஸ், ஓபிஎஸ் கோஷ்டி பூசலானது விரைவில் முடிவுக்கு வந்தால்தான் கட்சிக்கு சிறப்பான எதிர்காலம் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Update: 2022-09-03 05:35 GMT

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்  அப்போதைய கொள்கை பரப்பு செயலாளருக்கு  செங்கோல் வழங்கியது.

ADMK News Tamil -


முன்னாள் முதல்வர்களான இபிஎஸ் ,ஓபிஎஸ் ஆகியோர் முன்பு இணைந்ததன் படம் (பழைய படம்)

ADMK News Tamil -தமிழகத்தில் இரு பெரும் துருவங்களாக விளங்கி வரும் அரசியல் கட்சிகளான அதிமுக, திமுகவில் அவ்வப்போது கோஷ்டிபூசல் வரும்.பின்னர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் சரியாகிவிடும்? . தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் திமுகவில் ஒற்றைத்தலைமையாக தலைவராக ஸ்டாலின் இருப்பதால் கட்சியானது கட்டுக்கோப்போடு சென்று கொண்டிருக்கிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பிறகு மதுரை அழகிரியால் பிரச்னை வரலாம் எனஎதிர்பார்க்கப்பட்டு பின்னர் அவர் ஒதுங்கி கொண்டதால் தற்போதைய தலைவர் ஸ்டாலினுக்கு ரூட் கிளியர் ஆகி இன்று வரை அவரது தலைமையில் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

திமுகவை எதிர்த்து அதிமுகவை ஆரம்பித்தார் முன்னாள் முதல்வரும் மக்கள் திலகமுமான எம்ஜிஆர். அவரது மறைவுக்கு பின் அவரது மனைவிஜானகிஅம்மாள் ஒரு கோஷ்டியாகவும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு கோஷ்டியாகவும் களம் இறங்கி தேர்தலில் நின்று தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் 13 ஆண்டுகளாக வனவாசம் போல் இருந்த திமுக ஆட்சியைக் கைப்பற்றியது இது ஒரு கதை.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், ஜானகி ஆகியோரது மறைவுக்கு பிறகு மறைந்த முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளராகவும் பதவி வகித்து வந்த ஜெயலலிதா தலைமையில்அதிமுக கட்டுக்கோப்பாக இருந்து வந்தது. அவரது தலைமையில் கட்சியில் யார் தவறு செய்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் நிர்வாகிகள் ,அமைச்சர்கள் முதல் அனைவருமே கலக்கத்தில் இருந்து வந்தனர்.

ஆனால் 2011 ல் இருந்து 2016 வரை ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுக 2016 சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கட்டிலில்அமர்ந்தது. பின்னர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் இறந்துபோனதால் தற்போது வரை அதிமுகவில் உட்கட்சி குழப்பம் நீடித்து வருகிறது.

முன்னாள் முதல்வர்களான இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவருக்குள்ளும் பல பிரச்னைகள் மனஸ்தாபங்கள் இருந்தாலும் 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்தனர். பின்னர் சட்டசபை தேர்தலை சந்தித்தனர். திமுக வெற்றி பெற்றது. அதிமுக எதிர்க்கட்சியானது. இதுவே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ உயிருடன்இருந்திருந்தால் 2021 ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருக்குமா? என்ற சந்தேகம் மக்களிடையே மட்டும் இல்லை அரசியல் நோக்கர்களிடமும் இருந்து வருகிறது.

இபிஎஸ்-ஓபிஎஸ் புகைச்சல்

முன்னாள் முதல்வர்களாக பதவி வகித்த இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோருக்குள் உள்ள கோஷ்டிபூசல் தொடர்ந்து இருக்கும் பட்சத்தில் இவர்களுடைய கோஷ்டிபூசலை மற்ற கட்சிகள் சாதகமாக பயன்படுத்தி காய் நகர்த்திவிடும் என்ற உண்மை இருவருக்கும் தெரிந்தும் இப்பூசலுக்கு இருவருமே முடிவு கட்டாமல் தொடர செய்கின்றனர்.இது கட்சியின் எதிர்காலத்திற்கு பாதிப்பு  என தொண்டர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

அதிமுகவின் எதிர்காலம்?

கோர்ட்டில் வழக்கு போடுவது, அது தீர்ப்பு வருவது என்பது சட்டத்தின் படி இருந்தாலும் சாதாரண பொது ஜனத்திற்கு இது எம்ஜிஆர் கட்சி இப்படியாகிவிட்டதே? என்று வருத்தத்தில் இவர்களிடையே ஒற்றுமை இல்லை , இவர்களுக்கு எதற்கு நமது ஓட்டு என மனம் மாறி மாற்று கட்சிகளுக்கு வாக்களி்க்க நினைத்தால் அதிமுகவின் எதிர்காலம் என்னஆகும்? சற்று நினைத்து பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது கூட்டத்தில் பேசும்போது 100ஆண்டுகளுக்கு மேல் இந்த கட்சி நிலையாக இருக்கும் என பேசியுள்ளார்.ஆனால் அவர் வழி ஆட்சி நடத்துகிறோம் என சொல்லும் முன்னாள் முதல்வர்கள் இபிஎஸ் ஓபிஎஸ் ஆகியோர் இதுபோல் ''ஈகோ'' யுத்தம் நடத்தி கொண்டிருந்தால் பாமர மக்கள் மனசு மாறும் நிலைதான் தொடர்ந்து நடக்கும். அதேபோல் கட்சி தொண்டர்களும் தலைவர்களிடத்திலேயே ஒற்றுமை இல்லை நாம் ஏன் கஷ்டப்படவேண்டும் என்ற மனநிலைக்குவந்துவிடுவார்கள். எனவே இருவரும் தங்களுடைய சுய வெறுப்பு, விருப்புகளை மறந்து மீண்டும் இணைந்து செயல்பட்டால்தான் இவர்களுடைய நிறுவனரும் முன்னாள் தலைவருமான எம்ஜிஆர் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் கண்ட கனவுகள் அனைத்தும் நிறைவேறும். இல்லாவிட்டால் இருவரின் கோஷ்டிபூசலைப் பயன்படுத்தி தமிழகத்தில் மாற்று கட்சி வலுப்பெற்றுவிடும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

பாஜ வுக்கு சாதகம்

அதிமுகவின் உட்கட்சிபூசலை பாஜ சாதகமாக பயன்படுத்தி கொள்வதாக அரசியல் நோக்கர்களும், அதிமுக நிர்வாகிகளுமே முன்பு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இந்தியாவில் அனைத்து மாநிலங்களையும் தன் கைவசப்படுத்த வேண்டும் என மத்தியஉள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜ அகில இந்திய தலைவர் ஜேபிநட்டா ஆகியோர் முயற்சி மேற்கொண்டு வரும் வேளையில் இதுபோல் பிரிவினையாக அதிமுக இருக்கும் பட்சத்தில் வரப்போகும் 2024 லோக் சபா தேர்தலில் அதிக எம்பிக்களை தக்க வைத்துக்கொள்ள பாஜ முயற்சி மேற்கொள்வதோடு இப்போதிருந்தே தன் திட்டத்தினை வகுக்க ஆரம்பித்துவிட்டது என்று கூட சொல்லலாம்.

solution for admk

மீண்டும் இணையவேண்டும்

முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர், ஜெயலலிதாஆகியோரின் கனவு நனவாகவேண்டும் என்றால் உட்கட்சி பூசலை மறந்து நடந்தது கனவாக இருக்கட்டும் நடப்பது நல்லதாக இருக்கட்டும் என அனைத்தையும் மறந்து பதவி ஆசையை துறந்து யாராவது ஒருவர் தலைமையில் கட்சியை வழிநடத்தி சென்றால்தான் தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க முடியுமே ஒழிய இதுபோல் உட்கட்சி பூசலோடு எந்த தேர்தலை சந்தித்தாலும் அதில் பாதகமான முடிவுகளையே அதிமுக சந்திக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை .எனவே இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே அதிமுக தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களும் எதிர்பார்க்கின்றனர். இணைவார்களா? இணையுமா இரு கைகளும்? பொறுத்திருந்து பார்ப்போம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News