வெள்ளத்தில் சிக்கிய அமீர் கானுக்கு உதவிய நடிகர் அஜித்

தங்கள் வில்லாவில் சிக்கிய 30 பேருக்கு நடிகர் அஜித் பயண வசதியை ஏற்படுத்திக் கொடுத்ததாக விஷ்ணு விஷால் கூறியுள்ளார்

Update: 2023-12-06 06:42 GMT

வெள்ளத்தில் இருந்து நடிகர் விஷ்ணு விஷாலுடன் மீட்கப்பட்ட நடிகர் அமீர் கான் 

மிக்ஜம் புயலால் இரண்டு நாள்களாக கொட்டித் தீர்த்த அதி கனமழை ஓய்ந்த நிலையில், சென்னையின் பலப்பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் சென்னை மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். இதனால், சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, நடிகர் விஷ்ணு விஷால் வசித்து வரும் காரப்பாக்கத்திலும் நீர் சூழ்ந்திருந்தது. இதனை, எக்ஸ் தளத்தில் தெரிவித்தவர் தனக்கு உதவும்படி அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

தொடர்ந்து, அவர் இருக்கும் வீட்டை அடைந்த தமிழக தீயணைப்புப் படையினர் விஷ்ணு விஷால் மற்றும் அவரின் மனைவி ஜுவாலா கட்டாவை மீட்டனர். எதிர்பாராத விதமாக, பாலிவுட் நடிகர் அமீர்கானும் அதே பகுதியில் இருந்திருக்கிறார். அவரைத் தொடர்பு கொண்டவர்கள், பத்திரமாக அமீர் கானை மீட்டு விஷ்ணு விஷாலுடன் அழைத்து வந்தனர்.


மீட்கப்பட்டபின் அமீர்கானும் சென்னையில் இருந்தார் என்கிற செய்தி வேகமாகப் பரவத் துவங்கியது. இதனையடுத்து, நடிகர் விஷ்ணு விஷால் தன் எக்ஸ் தளத்தில், “ நாங்கள் இருந்த நிலையை பொதுவான நண்பர் மூலம் அறிந்துகொண்ட அஜித் சார், எங்கள் வில்லாவைச் சேர்ந்த 30 பேருக்கும் பயண வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார். எப்போதும் உதவும் மனப்பான்மையைக் கொண்டவர். லவ் யூ அஜித் சார்” எனப் பதிவிட்டதுடன் அஜித்குமார் மற்றும் அமீர்கானுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டார்.

இப்படம், உடனடியாக இந்திய அளவில் டிரெண்டிங் ஆனதுடன் வைரலாகியது. பலரும் அஜித் குமாரின் செயலைப் பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News