முள்ளிவாய்க்கால் சம்பவம் : தலைவர்கள் கண்டனம்

Update: 2021-01-09 06:44 GMT

முள்ளி வாய்க்கால் நினைவு ஸ்தூபியை இடித்த இலங்கை அரசுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த நினைவு ஸ்தூபியை, இலங்கை அரசால் இரவோடு இரவாக இடித்துத் தள்ளியுள்ளது. அண்மையில் ராணுவத்தினர் நேரில் அந்த ஸ்தூபியை பார்வையிட்ட நிலையில், தற்போது இடிக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அரசின் இந்த செயலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், இலங்கை, முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ள செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது.உலக தமிழர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ள இலங்கை அரசின் இந்த மாபாதக செயலுக்கும் அதற்கு துணை போன யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

அது போல் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- இலங்கைப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலையில் அமைக்கப்பட்ட நினைவுத்தூண் நேற்று நள்ளிரவில் இடித்து தகர்க்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.ஈழப்போரில் ஈவு இரக்கமின்றி கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க போராடிக் கொண்டிருக்கிற வேளையில், தமிழர்களின் உணர்வை மேலும் ரணப்படுத்தும், இனவெறியினரின் இந்த இழிசெயல் கடும் கண்டனத்திற்குரியது. ஏற்றுக்கொள்ள முடியாத இக்கொடுஞ்செயலை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன், எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News