பணப்பட்டுவாடா: பா.ம.க, நாம் தமிழர், ம.நீ.ம. கட்சியினர் சாலை மறியல்

மாமல்லபுரம் பேரூராட்சி கவுன்சிலர் தேர்தலில் பணப்பட்டுவாடா நடப்பதாகக்கூறி, பா.ம.க. நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-02-18 12:00 GMT

மறியலில் ஈடுபட்ட அரசியல் கட்சியினர். 

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தல் நாளை நடக்கிறது. மாமல்லபுரத்தில் உள்ள 15-வார்டுகளிலும் குறிப்பிட்ட 2 கட்சினர் (திமுக-அதிமுக) வாக்காளர்களுக்கு,  ஓட்டுக்கு ரூ.2000 முதல் 5000 வரை பணப்பட்டுவாடா செய்து வருவதாக புகார் எழுந்தது. பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்த கோரி, மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர், மக்கள் நீதி மையம் ஆகிய கட்சியினர், இன்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன்,  மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்தி சமாதானம் செய்து அங்கிருந்து கலைந்து போக சொன்னார். ஆனால், மாமல்லபுரம் பேரூராட்சி தேர்தல் அதிகாரி பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்தாத வரை நாங்கள் இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம் என்றுகூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் உருவானது.

பிறகு மாமல்லபுரம டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் மாமல்லபுரம் பேரூராட்சி தேர்தல் அதிகாரி கணேஷை வரவழைத்து பா.ம.க. நாம் தமிழர், மக்கள் நீதி மையம் கட்சியினரிடம் மனு வாங்கி கொண்டு இப்பிரச்சனைக்கு தீர்வு காண கேட்டு கொண்டார். பிறகு மாமல்லபுரம் பேரூராட்சி தேர்தல் அதிகாரி அங்கு வந்து பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படைகளை அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளதாக கூறியவுடன் பா.ம.க. மற்றும் நாம் தமிழர், மக்கள் நீதி மையம் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். பா.ம.க.வினரின் மறியல், முற்றுகையால் பேரூராட்சி அலுவலகத்தில்,  2 மணி நேரம் பதட்டமான சூழல் நிலவியது.

Tags:    

Similar News