சென்னையில் கள்ளச்சந்தையில் மதுவிற்ற 6 பேர் கைது

சென்னையில் கள்ளச்சந்தையில் மதுவிற்ற 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 298 மது பாட்டில்கள், 139 பீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2022-03-10 16:30 GMT

தாம்பரம் பகுதியில் கள்ளச்சந்தையில் விற்ற முயன்ற மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

தாம்பரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு, உதவி கமிஷனர் ரவிச்சந்திரன் தலைமையில், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள, டாஸ்மாக் கடைகளில், இன்று திடீரென சோதனை நடந்தது. அதில், தாம்பரம் காவல் நிலைய பகுதியில், கள்ளச்சந்தையில், விற்பனை செய்வதற்காக வைத்திருந்த, 65 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, காமராஜ்(32), என்பவர் கைது செய்யப்பட்டார். அதேபோல், அனகாபுத்தூர் அணுகு சாலையில், போலீசார் ஆய்வு செய்ததில், 186 மது பாட்டில்கள், 7 பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பூமிநாதன்(32), என்பவர் கைது செய்யப்பட்டார். சேலையூர் காவல் நிலையத்திற்குட்பட்ட, வேங்கைவாசலில் நடந்த ஆய்வில், 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ராஜா என்பவர், கைது செய்யப்பட்டார்.

மணிமங்கலம் காவல் நிலையத்திற்குட்பட்ட, ஜவஹர்லால் நகரில், நடந்த ஆய்வில், 21 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சசிகுமார்(38), என்பவர் கைது செய்யப்பட்டார். குன்றத்தூர் நடந்த ஆய்வில், 132 பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கலியபெருமாள்(42), பாஸ்கர்(35), ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தாம்பரம் கமிஷ்னர் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஈடுபட்ட திடீர் ரெய்டில் மொத்தமாக 298 மது பாட்டில்கள், 139 பீர் பாட்டில்களை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனையில் ஈடுபட்ட மது விலக்க அமலாக்க பிரிவு ஆய்வாளர்கள் சரவணன், ஷாலினி உள்ளிட்ட காவல் குழுவினரை தாம்பரம் கமிஷனர் ரவி பாராட்டினார்.

Tags:    

Similar News