சாலையில் சாக்கடை கழிவுகள்: பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் அவதி

சாலையில் கொட்டிக்கிடக்கும் சாக்கடை கழிவுகளால் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Update: 2022-08-18 07:15 GMT

சாக்கடை கழிவுகளால் சாலையில் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகும் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள்.

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட, கிழக்கு தாம்பரம், கணபதிபுரம், பரலி நெல்லையப்பர் தெருவில் வெள்ள நீர் வடிகால்வாய் கடந்த ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. சுதானந்தபாரதி தெருவில் இருந்து பரலி நெல்லையப்பர் தெரு, செங்கேணியம்மன் கோயில் தெரு வழியாக சென்று நல்லேரிக்கு போய் சேர வேண்டும்.

இதில் ரயில்வே நிர்வாகம் கழிவு நீரை விடுவதால் ஏரியில் கழிவு நீர் கலப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் கால்வாயில் இருந்த சாக்கடை கழிவுகளை அள்ளி சாலையில் மலை குவியல் போல் கொட்டி விட்டு சென்றனர்.

இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் இப்பகுதியில் மூன்று பள்ளிகள் இருப்பதால் பள்ளி மாணவர்கள் கடந்து செல்ல முடியாமல் அவதியடைந்தனர். சில மாணவர்கள் சாக்கடை சேற்றில் ஷு சிக்கியும் கடந்து செல்லும் அவல நிலையும் ஏற்பட்டது.

இது தொடர்பாக விளக்கம் கேட்க மண்டலம் 5ல் உதவி பொறியாளர் பிரதாப் சந்திரன் அவர்களையும், தாம்பரம் மேயர் வசந்தகுமாரியை தொடர்பு கொண்ட போதும் அழைப்பை ஏற்கவில்லை.

63 வதுவார்டு திமுக மாமன்ற உறுப்பினர் ஜோதிகுமாரை தொடர்பு கொண்டு கேட்ட போது ஆளும் கட்சி கவுன்சிலரான தான் கூறும் எந்த பணியையும் அதிகாரிகள் செய்ய மறுப்பதாகவும், மக்கள் மீது அக்கறை இல்லாமல் செயல்படுகிறார்கள். மக்களை திரட்டி போராட்டம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக கூறுகிறார். 

Tags:    

Similar News