தாம்பரம் அருகே இளைஞர் ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையில் சடலமாக மீட்பு

தாம்பரம் அருகே இளைஞர் ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Update: 2021-10-27 18:45 GMT

மர்ம மரணமடைந்த மஞ்சுநாதன்.

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் மப்பேடு பகுதியில் உள்ள சுடுகாட்டின் அருகே ஆண் சடலம் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இருப்பதாக சேலையூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாதன்(33), இவர் கட்டிட கான்ராக்டர் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி திவ்யபாரதி(28), இவர்களுக்கு திருமணமாகி இரண்டு வருடம் ஆகிய நிலையில் மஞ்சுநாதன் 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வைத்து சென்னை புறநகர் பகுதியில் சுமார் 8 இடங்களில் கட்டிடம் கட்டி வந்துள்ளார்.
ஒரு வார காலமாக செங்கல், மணல்,ஜல்லி ஆகிய கட்டுமான பொருட்கள் விலையேற்றத்தால் கட்டுமான பணிகள் கான்டிராக்ட்டில் நஷ்டம் ஏற்பட்டு பாதிக்கபட்டு உள்ளதாகவும் இதனால் தொழிலாளர்களுக்கு சம்பளம்  வழங்க முடியவில்லை என்று தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் கூறி வந்துள்ளார்.
நேற்று வழக்கம் போல் பணிக்கு சென்றவர் இரவு வெகு நேரமாகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த மனைவி மற்றும் உறவினர்கள் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் கட்டிட வேலை நடக்கும் இடங்களில் தேடி வந்த நிலையில் சேலையூர் அடுத்த மப்பேடு பகுதியில் உள்ள சுடுகாட்டில் கழுத்து அறுக்கபட்ட நிலையில் மஞ்சுநாதன் பிணமாக இருந்துள்ளார்.
மேலும் உடலின் அருகில் சிறிய கத்தி இருந்ததால் மன உளைச்சலில் இருந்த அவர் தனக்குதானே கழுத்தை அறுத்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News