சிட்லப்பாக்கத்தில் கடத்தப்பட்ட சிறுமியை ஒருமணி நேரத்தில் மீட்ட போலீஸார்…

Tambaram News -சிட்லப்பாக்கம் அருகே வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கடத்தப்பட்ட நிலையில், போலீஸார் ஒரு மணி நேரத்தில் மீட்டு கடத்திய நபரை கைது செய்தனர்.

Update: 2022-11-02 15:30 GMT

போலீஸாரால் கைது செய்யப்பட்ட சம்சுதீன்.

Tambaram News -சென்னை அருகேயுள்ள சிட்லபாக்கம் காவல் எல்லைக்குட்பட்ட, செம்பாக்கம், திருமலைநகர் முதல் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் வினோத். தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது நான்கரை வயது பெண் குழந்தை வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தார்.

சிறுமியுடன் இரண்டு ஆண் சிறுவர்களும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சிறுமியை மட்டும் ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு, சிறுவர்களை அங்கேயே விட்டுச் சென்றுள்ளார். இதையெடுத்து, உடன் இருந்த சிறுவர்கள் அந்த சிறுமியின் தந்தை வினோத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தாம்பரம் மற்றும் சென்னை காவல் எல்லைகளை உஷார்படுத்தி வாகன சோதனையில் ஈடுபட அறிவுறுத்தினார்.

அதன் அடிப்படையில் சிட்லபாக்கம், குரோம்பேட்டை, பள்ளிக்கரணை, தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட காவல் ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடத்தப்பட்ட சிறுமியை தேடி வந்தனர்.

மேலும், சேலையூர், கேம்ப் ரோடு, வேளச்சேரி பிரதான சாலை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரமாக உட்புற சாலைகளில் ஆட்டோவில் சிறுமியை வைத்து சுற்றி வந்த அந்த நபர் இரண்டு இடங்களில் இருந்த சிசிடிவியில் சிக்கியுள்ளார்.

அதன் பிறகு குரோம்பேட்டை எம்.ஐ.டி.மேம்பாலம் அருகே சிறுமியை கடத்திக் கொண்டு சென்ற போது போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் சிவகுமார், தலைமைக் காவலர் ஜலேந்திரன், முதல் நிலை காவலர் முத்துகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் அவரை மடக்கி பிடித்து சிறுமியின் புகைப்படத்தை காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி உறுதி செய்தனர். சிறுமியை அவர் கடத்தியது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறை அதிகாரிகள் அந்த நபரை கைது செய்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர். சிறுமியை பத்திரமாக மீட்டு அவரது வீட்டிற்கே சென்று பெற்றோரிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.


கைது செய்யப்பட்ட நபரிடம் பள்ளிகரணை துணை ஆணையர் ஜோஸ் தங்கையா நேரில் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் அவர் குரோம்பேட்டை ராதாநகரை சேர்ந்த சம்சுதீன் (34), என்பதும் அவர் சிட்லபாக்கம் காவல் நிலைய சி பிரிவு சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது. மேலும், சிறுமியை கடத்தியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த கடத்தல் சம்பவம் குறித்து பள்ளிக்கரணை துணை ஆணையர் ஜோஸ் தங்கையா செய்தியாளர்களிடம் கூறிய விவரம் வருமாறு:

சிறுமி 5.15 மணியளவில் கடத்தப்பட்டதாக தகவல் கிடைத்தது. உடனடியாக காவல் ஆணையர் தாம்பரம் மற்றும் சென்னை காவல் எல்லைகளை உஷார் படுத்தி, இரண்டு இடங்களில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தேடி வந்த நிலையில் எம்.ஐ.டி.பாலம் அருகே போக்குவரத்து போஸார் ஆட்டோவை மடக்கி பிடித்து சிறுமியை மீட்னர். கடத்தப்பட்ட ஒரு மணி நேரத்தில் சிறுமி மீட்கப்பட்டார். கடத்தலுக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? எனவும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துணை ஆணையர் ஜோஸ் தெரிவித்தார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 

Tags:    

Similar News