தாம்பரம்-செங்கல்பட்டு 3வது தடத்தில் முதலாவது மின்சார ரயில் இயக்கம்

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-வது வழித்தடத்தில் முதலாவது மின்சார ரயில் இயக்கம் தொடங்கியது.

Update: 2022-03-02 01:15 GMT

சென்னை கடற்கரை-தாம்பரம் வரை இயக்கப்படும் மின்சார ரயில்களை, செங்கல்பட்டு வரை இயக்கும் வகையில், தாம்பரம்-செங்கல்பட்டு இடையே சுமார் 30 கி.மீ. தூரத்துக்கு 3-வது பாதை அமைக்கும் பணிகள் ரூ.256 கோடி செலவில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 3 கட்டமாக நடைபெற்று வந்தது. முதற்கட்டமாக கூடுவாஞ்சேரி-சிங்கப்பெருமாள் கோவில் இடையே 11.07 கி.மீ தொலைவுக்கும், 2-வது கட்டமாக கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு இடையே 8.36 கி.மீ தொலைவுக்கு பாதை அமைக்கும் பணி நடந்தது.

இந்தநிலையில், இறுதி கட்டமாக கூடுவாஞ்சேரி-தாம்பரம் இடையே 3-வது புதிய பாதை பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. இந்த பணிகளும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்து ரயில்வே அதிகாரிகள் சோதனை ஓட்டத்தையும் நடத்தி முடித்தனர். இந்தநிலையில், நேற்று சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மாலை இயக்கப்பட்ட மின்சார ரயிலை, தாம்பரத்தில் இருந்து 3-வது வழித்தடத்தில் முதன் முறையாக அதிகாரிகள் இயக்கினர். இன்னும் ஓரிரு நாளில் 3-வது வழிப்பாதை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என தெரிகிறது.

Tags:    

Similar News