தாம்பரத்தில் முழு ஊரடங்கை பயன்படுத்தி கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை

முழு ஊரடங்கை பயன்படுத்தி தாம்பரத்தில் மளிகை, பால் கடைகளில் அடுத்தடுத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-01-24 12:54 GMT

கொள்ளை நடந்த மளிகை கடை.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த பீர்க்கண்கரணை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பழைய பெருங்களத்தூர் கலைஞர் சாலையில் செல்வநாதன் என்பவர் விஜயா ஸ்டோர் என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வருகிறார்.நேற்று முழு ஊரடங்கு என்பதால் கடையை திறக்கவில்லை. இன்று வழக்கம் போல மளிகைக் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த கடையின் உரிமையாளர் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது கல்லா பெட்டியில் வைத்திருந்த 20 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

அதே போல் அருகே உள்ள ரத்தினா ஸ்டோர் மளிகை கடையின் பூட்டை உடைத்து 5000 ரூபாயும், கே.பி.எஸ் பால் கடையின் பூட்டை உடைத்து 30 ஆயிரம் ரூபாயையும் திருடர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். புதிதாக திறக்கப்பட்ட மெடிகல் ஷாப் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பிரபல பேக்கரி கடை பூட்டை உடைக்க முயற்சித்து உடைக்க முடியாமல் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.கொள்ளை சம்பவ குறித்து கடையின் உரிமையாளர்கள் பீர்க்கண்காரணை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். முழு ஊரடங்கு நேரத்தில் ஐந்து கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News