தாம்பரம் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 18 கிலோ கஞ்சா பறிமுதல்

தாம்பரம் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 18 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2021-10-26 15:30 GMT
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பார்சல்கள்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திலிருந்து, சென்னை தாம்பரத்திற்கு சாா்மினாா் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று புறப்பட்டது. அந்த எக்ஸ்பிரஸ் ரயில் இன்று சென்னை தாம்பரம் ரயில்நிலையம் பிளாட்பாரம் 8 ல் வந்து நின்றது. இதையடுத்து ரயிலில் வந்த பயணிகள் ரயிலை விட்டு இறங்கத் தொடங்கினா்.

அப்போது தாம்பரம் ரயில்நிலையத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படையினா், ரயில் பெட்டிகளில் ஏறி சோதனை நடத்தினா். அப்போது S 2 என்ற தூங்கும் வசதி கொண்ட ரயில் பெட்டியில் ஒரு பர்த்திற்கு அடியில் 5 பாா்சல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுப்பிடித்தனா். அப்போது ரயில்வே பாதுகாப்புப்படை வீரா்கள் அந்த பாா்சல்களை எடுக்காமல் இறங்கிவிட்டனா்.

இதையடுத்து இரயில்வே போலீசார் அந்த பாா்சல்கள் யாருடையது என்று பயணிகளை விசாரித்தனா். ஆனால் யாருமே பாா்சல்களுக்கு உரிமை கோரவில்லை. இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு படையினா், அந்த பாா்சல்களை ரயில்வே காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று பிரித்து பாா்த்தனா். அவைகளில் கஞ்சா போதைப்பொருள் மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்து பறிமுதல் செய்தனா். 5 பாா்சல்களிலும் மொத்தம் 18 கிலோ கஞ்சா போதைப் பொருள் இருந்தது.

இதையடுத்து ஆா்பிஎப் அதிகாரிகள், சென்னையில் உள்ள மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசுக்கு தகவல் கொடுத்தனா். அவா்கள் வந்து போதைப் பொருளை கைப்பற்றி எடுத்து சென்றனா்.

இதற்கிடையே தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படையினா் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து, அந்த S 2 பெட்டியில் பயணம் செய்த முன்பதிவு பயணிகள் 72 பேரின் பட்டியலை ரயில்வே அதிகாரிகளிடம் பெற்று, அதில் சந்தேகத்திற்கிடமான பயணிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனா்.

Tags:    

Similar News