''அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்'' நெகிழ வைத்த காவலதுறையினர் செயல்
சென்னை பெருங்குடி முகாமில் தங்கியிருந்த குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாடிய போலீசார். சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்.;
முகாமில் தங்கியிருந்த குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாடிய போலீசார், சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்.
சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில் பெருமழை வெள்ளம் காரணமாக தண்ணீர் சூழும் அபாயம் உள்ள பகுதிகளில் உள்ள பொது மக்கள் தங்குவதற்காக தமிழக அரசு நிவாரண முகாமை பெருங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏற்படுத்தி அங்கு பாதிப்புக்குள்ளான மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். துரைப்பாக்கம் காவல் நிலைய போலீசார் வழக்கமான ரோந்து பணியின்போது அந்த நிவாரண முகாமில் பார்வையிட்டு அங்கிருந்த மக்களின் தேவைகளை கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தனர்.
இந்நிலையில் இன்று முகாமில் உள்ள மோனிகா என்னும் ஒரு வயது பெண் குழந்தைக்கு பிறந்தநாள் என்ற விவரம் தெரிய வந்தவுடன் துரைப்பாக்கம் காவல் நிலையத்தை சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஒன்றிணைந்து அந்த ஒரு வயது பெண் குழந்தைக்கு புத்தாடை சாக்லேட் பலூன் கேக் போன்ற பரிசு பொருட்களை வாங்கி அந்த முகாமில் உள்ள நபர்களோடு சேர்த்து குழந்தையின் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடினர். இந்த சம்பவம் அந்த முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை நெகிழச் செய்தது.
மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு,பல்வேறு கஷ்டங்களுடன் முகாமில் தங்கி இருந்தாலும்,அவர்களை துரைப்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெய்கணேஷ், தலைமை காவலர் நவரத்தினம், முதல் நிலை காவலர் சூரியச்சந்திரன், தலைமை பெண் காவலர் பாரதி, முதல் நிலை காவலர் முத்து கிருஷ்ணன் என சேர்ந்து குழந்தையையும், முகாமில் தங்கி இருந்தவர்களையும் சிறிது நேரம் மகிழ்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.