சீட் பெல்ட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு தாம்பரம் காவல் ஆணையர் அறிவுரை
கிழக்கு கடற்கரை சாலையில் சீட் பெல்ட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு தாம்பரம் காவல் ஆணையர் அறிவுரை வழங்கினார்.;
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, உத்தண்டி சுங்கச்சாவடி அருகில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை மடக்கி பிடித்த போலீசார் அவர்களை அமர வைத்தனர்.
பின்னர் அவர்களுக்கு தாம்பரம் காவல் ஆணையர் ரவி அவர்கள் அறிவுரை வழங்கி போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்கவும், தற்போது உங்களை பிடித்து இருப்பது அபராதம் விதிப்பதற்காக இல்லை, அடுத்த முறை சீட் பெல்ட் கட்டாயம் அணியவும், விபத்தை தவிர்க்கவும் கேட்டுக் கொண்டார்.
இருசக்கர வாகனத்தில் சென்றால் தலைக்கவசம் அணியவும், முன்று பேராக செல்வது, குடிபோதையில் வாகனத்தை இயக்குவது, ரேஸ் செல்வது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது. அவ்வாறு ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதை விட முதலில் விதிமுறைகள் குறித்து கற்றுத்தர வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
அதே போல் அவர்களிடம் பேசுகையில், பொதுமக்கள் மட்டுமல்ல, போலீசாரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் இல்லையென்றால் அவர்களுக்கு வாரத்தில் ஓர் நாள் வழங்கப்படும் விடுமுறை ரத்து செய்யப்படும் என கூறினார்.