வீடு புகுந்து பெண்ணிடம் நகையைபறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடும் போலீசார்

வீடு புகுந்து வயதான பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

Update: 2022-07-17 07:30 GMT
வீடு புகுந்து பூ விற்கும் வயதான பெண்ணின் கண்களில், மிளகாய் பொடி தூவி, கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க செயினை பறித்துச் சென்ற பர்தா அணிந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
சென்னை, பள்ளிக்கரணை, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நன்மங்கலம் ஊராட்சி, பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாபு (54), இவரது மனைவி ஹேமாவதி(50), கணவன் மனைவி இருவரும் சேர்ந்து, அந்தப் பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகின்றனர்.
இன்று அதிகாலை, சுமார் 2:30 மணி அளவில், இரண்டு மர்ம நபர்கள் பர்தா அணிந்து, பாபு வீட்டிற்கு வந்து நிகழ்ச்சி ஒன்றிற்கு அவசரமாக பூக்கள் வேண்டும் என கூறி 1000 ரூபாய் கொடுத்துள்ளனர்.
அந்த மர்ம நபர்கள் கேட்ட அளவுக்கு தங்களிடம் பூக்கள் இருப்பு இல்லாததால், அருகாமையில் உள்ள மற்றொரு வியாபாரிடம் பூக்களை வாங்கிவரச் சென்றுள்ளார் பாபு. இவர்  வெளியே சென்ற பிறகு, ஹேமாவதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்தச் சமயத்தில், அந்த மர்ம நபர்கள், ஹேமாவதியின் கண்களில் மிளகாய் பொடியைத் தூவி, வாயை இறுக்கமாக மூடினர். பின்னர் அவரது கழுத்தில் அணிந்திருந்த ஏழு சவரன் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு, அங்கிருந்து தப்பினர்.

பாபு வீட்டிற்கு வந்தபோது, நடந்த சம்பவம் குறித்து ஹேமாவது கூறியுள்ளார். உடனே, பள்ளிக்கரணை போலீசாருக்கு பாபு தகவல் தெரிவித்தார்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து,  மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News