பள்ளிக்கரணையில் சதுப்பு நிலத்தை சீரமைக்க நபார்டு நிதி ரூ.251 கோடி: அமைச்சர் தகவல்

சதுப்பு நிலத்தில் பறவைகள் வந்து தங்கி செல்லவும் பராமரித்து பாதுகாக்க முதற்கட்டமாக ரூ. 68 கோடியில் பணிகள் செய்யப்பட்டுள்ளது

Update: 2022-03-16 08:30 GMT

தமிழக வன துறை அமைச்சர் ராமசந்திரன் 

பள்ளிக்கரணையில் சதுப்பு நிலத்தை சீரமைக்க ரூ.251 கோடி நபார்டு நிதி மூலமாக மத்திய அரசு தர உள்ளதாக அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்தார்.

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அமைக்கப்பட்ட வன பூங்காவில் செய்யப்பட்டு உள்ள பணிகள், மேற்கொண்டு செய்யப்படும் பணிகள் குறித்து தமிழக வன துறை அமைச்சர் ராமசந்திரன் ஆய்வு செய்தார். 

செய்யப்படும் பணிகள் குறித்து அமைச்சரிடம் சென்னை மண்டல வன அலுவலர் கீதாஞ்சலி, சென்னை மாவட்ட வன அலுவலர் பிரியதர்ஷினி ஆகியோர் விளக்கினார்கள். பின்னர் அமைச்சர் ராமசந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பள்ளிக்கரணை சதுப்பு நிலம் 1400 ஏக்கருக்கு மேல் இருந்தது. ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்ட பின் தற்போது 700 ஏக்கர் உள்ளது. சதுப்பு நிலம் இருப்பதால் நிலத்தடி நீர் பாதுகாப்பதுடன் வெள்ள பெருக்கு ஏற்படுவதை தடுக்கும்.

சதுப்பு நிலத்தில் பறவைகள் வந்து தங்கி செல்லவும் பராமரித்து பாதுகாக்க முதற்கட்டமாக ரூ. 68 கோடியில் பணிகள் செய்யப்பட்டு உள்ளது. மத்திய அரசின் நிதியுடன் ரூ. 251கோடி செலவில் பணிகள் செய்யப்படும். மக்கள் பயன்படுத்த கூடிய வகையில் செய்யப்படும். குப்பைகளை அகற்றி நிலத்தை மாநகராட்சி திருப்பி தந்ததும் அவை சீரமைக்கப்படும். மத்திய அரசின் நபார்டு நிதியுதவியுடன் பணிகள் செய்யப்படும்.

சதுப்பு நிலத்தில் ஆக்கிரமித்து உள்ள கட்டப்பட்ட கட்டிடங்களில் வசிப்பவர்களுக்கு நகர்புற வசிப்பிட திட்டத்தில் வீடுகள் வழங்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் படிப்படியாக அகற்றப்படும்.தமிழகத்தில் கிராமம் சார் குறியீட்டில் 13 இடங்களை தேர்வு செய்து மேம்படுத்த கூடிய பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த இடங்களை மேலும் அதிகப்படுத்த திட்டமிட்டு வருகிறோம்.

நீர் ஆதாரம் உள்ள இடங்களாக 100 இடங்கள் தேர்வு செய்து பட்டியல் தரப்பட்டு உள்ளது. இந்த இடங்களை மேம்படுத்தும் போது நிலத்தடி நீர் உயரும்.சதுப்பு நிலத்தில் கழிவுநீர் வந்தாலும் அதை சுத்திகரித்து நல்ல நீராக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.வனவிலங்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் இழப்பீட்டு தொகை வழங்கப் படவில்லை. ஆனால் உடனடியாக இழப்பீடு வழங்க ரூ.10 கோடியை முதலமைச்சர்  ஒதுக்கி தந்தார்.

வனபகுதிகளில் அகழிகள் அமைக்க ஒவ்வொரு மண்டலத்திற்கு பொக்லைன் வாகனம் வழங்கப்படும். அகழிகளை அறிவு அதிகம் கொண்ட யானைகள் மூடிவிடுகின்றது.  சோலார் மின்சார வேலிகள் அமைக்க பட்ஜெட்டில் நிதி கேட்டு உள்ளோம்.கன்னியாகுமரி மாவட்டத்தில் வயதான ரப்பர் மரங்களை அகற்றி விட்டு புதிய மரங்கள் வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

தமிழகத்தில் வன பகுதியை அதிகரிக்க முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் 2023ம் ஆண்டிற்குள் 2 கோடியே 50 லட்சம் மரங்கள் நடப்படும். அதன் பின் ஆண்டிற்கு 31 கோடி மரங்கள் நட திட்டமிட்டு வருகிறோம். 23.96 சதவீதமாக உள்ள வன பகுதியை 33 சதவீதமாக உயர்த்தப்படும் என்றார் அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.

Tags:    

Similar News