தமிழக அமைச்சர்களை விமர்சிப்பது பாஜகவின் பலவீனத்தை காட்டுகிறது :திருமாவளவன்

தமிழக அமைச்சர்களை விமர்சிப்பது பாஜகவின் பலவீனத்தை காட்டுகிறது என்று தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

Update: 2021-10-25 06:15 GMT

பேட்டியளித்த தொல் திருமாவளவன்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் அடுத்த பெத்தேல் நகர் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சுமார் 2,800 வீடுகளை அகற்ற கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் பல கட்டங்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே அப்பகுதி மக்களை சந்திக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் ஆகியோர் அப்பகுதிக்கு வருகை தந்தனர்.
அப்பகுதியை பார்வையிட்டு, மக்களிடையே குறைகளை கேட்டறிந்த பின்னர் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தனி நபர் ஒருவர் தொடர்ந்த வழக்கால் இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது மேய்ச்சல் புறம்போக்காக உள்ள இடத்தை, மக்கள் வசிக்கும் வகையில் நத்தம் புறம்போக்காக வகைப்படுத்தி தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டுமென முதல்வரிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து அமைச்சர்கள் மீதான பாஜக-வின் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், கவன ஈர்ப்புக்காக வாயில் வந்ததை எல்லாம் பாஜகவினர் பேசி கொண்டிருக்கின்றனர்.

பாஜகவினர் உருப்படியான அரசியலை பேசுவதில்லை. தங்களை அனைவரும் கவனிக்க வேண்டும், தங்களை பற்றி விவாதிக்க வேண்டுமென கருதுகின்றனர் என கூறிய அவர், பாஜக மீது கை வைத்தால் வட்டியும், முதலுமாக திருப்பி தரப்படும் என அண்ணாமலை கூறியிருப்பது அவரது பலவீனத்தை வெளிப்படுத்துவதாக கூறினார்.

Tags:    

Similar News