சென்னையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தேர்தலில் கோஷ்டி மோதல்
சென்னை பள்ளிக்கரணையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தேர்தலில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது.;
அ.தி.மு.க. உட்கட்சியின் அமைப்பு தேர்தல் நடைபெற்று வருகிறது. சென்னை புறநகர் பகுதி மாவட்ட கழக செயலாளர் பதவிக்கு மனுக்களை வழங்கும் நிகழ்வு பள்ளிக்கரணையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பா.வளர்மதி ஆகியோரை பொறுப்பாளர்களாக நியமித்து இருந்தனர். இதில் சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளராகப் பதவி வகித்து வரும் கே.பி.கந்தன் , தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மாவட்ட கழக செயலாளர் பதவிக்கு தனது விருப்ப மனுவை பொறுப்பாளர்களிடம் வழங்கினார்.
அதே போல் முன்னாள் எம்.எல்.ஏ.வெங்கட்ராமன், மாநில மாணவரணி துணை செயலாளரும், கோவிலம்பாக்கம் ஊராட்சி மன்ற துணை தலைவருமான மணிமாறன் ஆகியோர் மாவட்ட கழக செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கு தங்கள் விருப்ப மனுவை பொறுப்பாளர்களிடம் வழங்கினார்கள்.
இதனால் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் ஆதரவாளர்கள், விருப்ப மனுவை அளித்த கோவிலம்பாக்கம் மணிமாறனிடம் , ரகளையில் ஈடுப்பட்டனர்.மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் இருதரப்பினரும் இடையே மோதலை சமாதானப்படுத்தினார். பொறுப்பாளர்கள் முன்னிலையில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் பரபரப்பை ஏற்படுத்தியது.