கெளல் பஜாரில் தார் பிளாண்ட்டில் பயங்கர தீ விபத்து. நுரை கலவையால் தீ அணைப்பு
சென்னை பல்லாவரம் அடுத்த விமான நிலைய பின்புறம், பொழிச்சலூர் கெளல் பஜாரிலுள்ள தார் பிளாண்டில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் நுரை கலவையைக்கொண்டு தீயை அணைத்ததால் சேதம் தவிர்க்கப்பட்டது.;
சென்னை கெளல் பஜாரிலுள்ள தார் பிளான்டில் ஏற்பட்ட தீயால்வெளியேறிய கரும்புகை.
சென்னை பல்லாவரம் அடுத்த விமான நிலைய பின்புறம், பொழிச்சலூர் கெளல் பஜாரில் ராஜசேகர் என்பவருக்கு சொந்தமான தார் பிளாண்ட் செயல்பட்டு வருகிறது.
இங்கு தாரையும், ஜல்லியையும் ஒன்றாக கலந்து சாலை அமைக்க பயன்படுத்தப்படுகிறது.இந்நிலையில் இன்று மதியம் 12.30 மணியளவில் ஆயில் கசிவு காரணமாக திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கொளுந்து விட்டு எரிந்த தீயிலிருந்து கடும் கரும்புகை வெளியேறியது. உடனடியாக ஊழியர்கள் வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தகவலறிந்து வந்த தாம்பரம் மற்றும் தாம்பரம் பயிற்சி வாகனம், கிண்டி ஆகிய இடங்களிலிருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் நுரை கலவையை பயன்படுத்தி ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.தார் என்பதால் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைப்பது சாத்தியமில்லாததால் நுரை கலவை பயன்படுத்தபட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.தீ விபத்து தொடர்பாக சங்கர் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.