பல்லாவரம் அருகே 9 மாத குழந்தை கழிவறை தண்ணீர் பக்கெட்டில் விழுந்து உயிரிழப்பு..!

சென்னையில், பல்லாவரம் அருகே பள்ளி ஆசிரியையின் 9 மாத பெண் குழந்தை கழிவறை தண்ணீர் பக்கெட்டில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-06-24 11:45 GMT

சென்னை பல்லாவரம் அருகே கழிவறை பக்கெட் தண்ணீரில் பெண் குழந்தை உயிரிழந்து கிடந்த பள்ளி.

சென்னை பல்லாவரம் தர்கா சாலை, கோபாலன் தெருவில் பிரீ ஸ்கூல் இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் ஆசிரியராக பணிபுரிபவர் ஏஞ்சலின் ஜெயஸ்ரீ (24). இவர், தனது 9 மாத பெண் குழந்தையான கவிஸ்ரீ இத்திகாவை தன்னுடன் பள்ளிக்கு அழைத்து வந்திருந்தார். அப்போது மதியம் 12 மணியளவில் விளையாடி கொண்டிருந்த குழந்தை கழிவறைக்கு சென்று அங்கிருந்த தண்ணீர் பக்கெட்டிற்குள் விழுந்துள்ளது.

இந்நிலையில், சிறிது நேரம் கழித்து, குழந்தையை காணாமல் தேடிப்பார்த்த போது கழிவறை பக்கெட்டில் மூச்சு பேச்சின்றி குழந்தை கிடப்பது தெரியவந்தது. உடனடியாக குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை அளித்தும், அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இதுதொடர்பாக, தகவலறிந்து விரைந்து வந்த பல்லாவரம் காவல்துறையினர் குழந்தையின் உடலை, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கழிவறை தண்ணீர் பக்கெட்டில் குழந்தை விழுந்து உயிரிழந்தது  குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியினரிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News