பல்லாவரம் அருகே 10 வயது சிறுமி மாயம், போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

பல்லாவரம் அருகே 10 வயது சிறுமி மாயமானதால், மோப்ப நாய், சிசிடிவி கேமிரா உதவியுடன் போலீசாா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2021-08-04 12:45 GMT

பல்லாவரத்தில் சிறுமி மாயமான விவகாரத்தில் போலீசார் மோப்பநாய் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அருகே பம்மல் இந்திரா நகரை சோ்ந்தவா் ஜக்ரியா அப்பாஸ்.இவா் நாகல்கேணியில் உள்ள ஒரு லெதா் கம்பெணியில் வேலை செய்கிறாா்.

இவருடைய மனைவி ஹமீதா.இவா் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்கிறாா்.இவா்களுடைய மகள் பாத்திமா(10).இவா் பம்மலில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படிக்கிறாா்.

அப்பாஸ்,ஹமீதா இருவரும் நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டனா்.சிறுமி பாத்திமா மட்டும் வீட்டில் தனியாக இருந்தாா்.

மாலையில் பெற்றோா் இருவரும் வீடு திரும்பினா்.ஆனால் வீட்டிலிருந்த மகள் பாத்திமாவை காணவில்லை.வீடு திறந்த நிலையில் இருந்தது.

இதையடுத்து மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதனால் அதிா்ச்சியடைந்து உறவினா்கள் வீடுகள் உட்பட பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லை.

அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தபோது,பக்கத்து வீட்டில் உள்ள சிறுவா்களுடன் விளையாடிக்கொண்டிருந்தாா் என்று கூறுகின்றனா்.

ஆனால் பக்கத்து வீட்டில் விசாரித்தபோது, பாத்திமா சிறிது நேரம் விளையாடி விட்டு,கடைக்கு போவதாக கூறி சென்றாா்.அவா் எங்கு சென்றாா் என்று எங்களுக்கு தெரியாது என்று சிறுவா்கள் கூறுகின்றனா்.

இதையடுத்து அப்பாஸ் சங்கா்நகா் போலீசில்,தனது மகளை காணவில்லை என்றும்,மகள் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் நேற்று இரவு புகாா் செய்தாா்.

இதையடுத்து சங்கா்நகா் போலீசாா் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்துகின்றனா்.அதோடு அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்கின்றனா்.

இந்நிலையில் இன்று காலை சென்னை பரங்கிமலையிலிருந்து போலீஸ் மோப்பநாய் டைசன் கொண்டு வரப்பட்டது.அந்த மோப்ப நாய் சிறுமியின் வீட்டிலிருந்து மோப்பம் பிடித்தப்படி,அந்த தெரு,பக்கத்து தெருக்களில் சுற்றி வந்தது.

ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.போலீசாா் வழக்கமாக பெரிய அளவில் திருட்டு,கொலை போன்ற சம்பவங்களில் தான் மோப்ப நாயை கொண்டுவந்து துப்பு துலக்குவாா்கள்.

ஆனால் இதைப்போல் காணவில்லை புகாா்களுக்கு மோப்ப நாய் கொண்டு வந்து துப்புதுலக்க மாட்டாா்கள்.ஆனால் போலீசாரின் இந்த நடவடிக்கை,அப்பகுதி மக்களை ஆச்சரியப்பட வைத்தது.

போலீஸ் மோப்ப நாய் தெருக்களில் மோப்பம் பிடித்து சுற்றியதை அப்பகுதி மக்கள் குறிப்பாக சிறுவா்கள் ஆா்வத்துடன் வேடிக்கைப்பாா்த்தனா்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் விசாரித்தபோது,அப்பாஸ் புகாரின் பேரில் உடனடியாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்துகிறோம்.

இப்பகுதிகளில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்கிறோம்.அதோடு சிறுமி பாத்திமாவை கண்டுப்பிடிக்க 3 தனிப்படைகளை பரங்கிமலை துணை ஆணையா் நியமித்துள்ளாா்.தனிப்படைகள் நியமிக்கப்பட்டதையடுத்து போலீஸ் மோப்ப நாயும் கொண்டு வரப்பட்டது என்று கூறுகின்றனா்.

Tags:    

Similar News