செங்கல்பட்டு அருகே பெண்ணை தாக்கி வழிப்பறி: 4 பேருக்கு போலீஸ் வலை

செங்கல்பட்டு அருகே பெண்ணை தாக்கி 6 சவரன் தங்க நகைகள் வழிப்பறி செய்த 10 வயது சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்

Update: 2021-09-25 03:45 GMT

செங்கல்பட்டு படாளம், பகுதியைச் சேர்ந்தவர் கற்பகம் (34) இவர் மேலவலம்பேட்டையில் உள்ள தனியார் மதுபான ஆலையில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று மாலை பணிமுடிந்தவுடன் கருங்குழியில் உள்ள தனது உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்று, பின்னர் நேற்று இரவு வீடு திரும்புவதற்காக கருங்குழி பேருந்து நிலையத்தில் நின்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த ஷேர்ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோ படாளம் செல்வதாக கூறினார். படாளம் அருகே வாசன் மருத்துவமனை அருகே ஷேர் ஆட்டோ சென்றுகொண்டிருக்கும் போது, திடீரென ஆட்டோவில் இருந்த 10 வயது சிறுவன் ஆட்டோவில் மறைத்துவைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்துக் காட்டி மிரட்டியுள்ளான். பின்னர் சக பயணிகளாக ஆட்டோவில் பயாணம் செய்த இரு பெண்களும் கத்தியை காட்டி சாலையோரம் உள்ள முட்புதரில் அழைத்துச் சென்று சரமாரி தாக்கி கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தாலிச் செயின் மற்றும் கம்மல் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினர்.

அதன் பின் கற்பகம் கூச்சலிட அங்கு வந்த மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கற்பகம் அளித்த புகாரின்பேரில் மதுராந்தகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சி.சி. டி.வி கேமராக்கள் இல்லாத காரணமாக தொடர் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது எனவும் நகர பகுதிகளுக்குள் வைத்திருக்கும் சி.சி. டி.வி கேமராக்களை போல் தேசிய நெடுஞ்சாலைகளிலும் அமைக்கவேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News