செங்கல்பட்டில் 24,000 நெல் மூட்டைகள் சேதம்; விவசாயிகள் கவலை

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழையில் நனைந்து 24ஆயிரம் நெல் மூட்டைகள் சேதமடைந்ததால் விவசாயிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-07-17 19:00 GMT

ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் திறந்த வெளியில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் இயங்கி வருகிறது. விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த தானியங்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.

இந்நிலையில், ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு 54ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட குடோன்களில் ஏற்கனவே வியாபாரிகள் கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் வைக்கப்பட்டிருந்ததால் சுமார் 30 ஆயிரம் மூட்டைகள் மட்டுமே குடோனில் வைக்கப்பட்டிருந்தது. மீதமிருந்த நெல் மூட்டைகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் திறந்த வெளியில் வைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக மழை பெய்தது. இதனால் திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த  நெல்மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து சேதமடைந்தன. இதையடுத்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இருந்த தார்ப்பாய்கள் மூலம் நெல் மூட்டைகளின் மேல் மூடப்பட்டன.

இருப்பினும் நெல்மூட்டைகள் முழுவதுமாக மழையில் நனைந்தன. நெல் ஈரமாக இருப்பதால், கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் விவசாயிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் மழையில் நனைந்தபடி விவசாயிகளும், தொழிலாளர்களும் நெல்லை எடை போட்டு வருகின்றனர்.

வியாபாரிகளின் நெல் மூட்டைகள் தொடர்ந்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட குடோனில் வைத்து இருப்பதால் விவசாயிகளின் நெல் மூட்டைகள் மழையால் நனைவது தொடர்கதையாக உள்ளது. விரைவில் இதற்கு முறையான தீர்வு காண வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News