மாசி மகத்தையொட்டி மாமல்லபுரம் கடற்கரையில் குவிந்த இருளர் இன மக்கள்

மாசி மகத்தையொட்டி மாமல்லபுரத்தில் குவிந்த இருளர் மக்கள் ஆடல் பாடலுடன் விடிய விடிய விழாவை கொண்டாடினர்.

Update: 2022-02-17 03:59 GMT

மாமல்லபுரம் கடற்கரையில் இருளர் இன மக்கள் மாசி மக விழாவை கொண்டாடினர்.

தமிழ் மாதங்களில் மிகவும் மகத்துவமான மாதமாக போற்றப்படுவது மாசி மாதம் தான். இந்த மாதத்தில்தான் மாசி மகம் திருவிழா செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் சிறப்பாக நடைபெறும்.

இந்த நிலையில் உலக புகழ்பெற்ற மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினம் ஆகிய கடற்கரை பகுதிகளில் மாசிமக தீர்த்தவாரித் திருவிழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில், மாமல்லபுரம், கல்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள18 கிராமங்களில் இருந்து முக்கிய ஆலயங்களின் உற்சவர்கள் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கடற்கரையில் நிறுத்தப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.  இதனைத் தொடர்ந்து மலை மண்டல பெருமாள் உற்சவர் கடலில் புனித நீராடபட்டது.

இவ்விழாவில் கலந்துகொள்ள தமிழகத்திலிருந்து லட்சக்கணக்கான இருளர் மக்கள் மாமல்லபுரம் கடற்கரைக்கு திரண்டனர். அங்கு கன்னியம்மனுக்கு பூஜைகள் செய்து கல்யாணம், காதுகுத்து, நிச்சயதார்த்தம் உள்ளிட்ட சடங்குகளை அவர்களது முறைப்படி செய்தனர். பின்னர் நேற்று மாலை முதல் இன்று காலைவரை விடியவிடிய மேளங்களை அடித்தவாறு ஆண் பெண் என அனைவரும் பாரம்பரிய பாடல்களை பாடி நடனமாடி மகிழ்ந்தனர். கொரொனா கட்டுபாடுகளால் கடந்த ஆண்டு மாசிமகத்தை முன்னிட்டு அனுமதியளிக்காத நிலையில் இந்த ஆண்டு அனுமதியளித்ததை அடுத்து லட்சக்கணக்கான இருளர் மக்கள் ஒன்றுகூடியதால்  மாமல்லபுரம் கடற்கரை ஸ்தம்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News