தேவாலயத்தை இடித்த தமிழக அரசை கண்டித்து தொடர் உண்ணாவிரத போராட்டம்

கல்பாக்கம் அடுத்த வாயலூர் பகுதியில் இருந்த கிருத்துவ தேவாலயத்தை இடித்த தமிழக அரசை கண்டித்து தொடர் உண்ணாவிரத போராட்டம்

Update: 2022-01-04 05:00 GMT

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வாயலூர் பாலாற்றங்கரையில் கண்பார்வையற்ற ரமேஷ் என்ற கிருத்துவ போதகரால் கிருத்துவ தேவாலயம் கடந்த 17 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது இதில் வாயலூர் கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த நபர்கள் ஆராதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கீற்றுக் கொட்டகையில் நடத்திவந்த தேவாலயம் சில சமூக விரோதிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதியதாக மீண்டும் அதே இடத்தில் கான்கிரீட் சுவர்கள் அமைத்து சுமார் பத்து லட்சம் ரூபாய் செலவில் தேவாலயம் கட்டப்பட்டது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்த தேவாலயம் அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறி வருவாய்த்துறை அலுவலர்கள் முன்னறிவிப்பின்றி தேவாலயத்தை இடித்தனர். இதனை பல்வேறு அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியும் உரிய நடவடிக்கை எடுக்காததால் அந்த கிருத்துவ தேவாலயத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு முதல் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News