ஜெயங்கொண்டத்தில் பிச்சை எடுத்த 3சிறுமிகள் மீட்பு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பிச்சை எடுத்த 3மாணவிகள் மீட்கப்பட்டனர்.

Update: 2022-02-26 06:34 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பிச்சை எடுத்த 3 மாணவிகள் மீட்கப்பட்டனர். ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் சுகாதார ஆய்வாளர் சுமதி தலைமையிலான அதிகாரிகள் நேற்று ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த 3 சிறுமிகளை பிடித்து விசாரித்தனர். மேலும், குழந்தைகள் கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் விஜயலட்சுமிக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சிறுமிகள் 3 பேரும் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டு, பெற்றோர்கள் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிகள் மூவரும் ஆந்திர மாநிலம் மொங்கோல் மாவட்டம் மார்க்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஏகபாபு - ரமணா தம்பதியரின் மகள் சுப்புலட்சுமி(11), கிருஷ்ணமூர்த்தி- லட்சுமி தம்பதியரின் மகள் நந்தினி(11), சிவா- ஜோதி தம்பதியரின் மகள் ஸ்ரீஜா (8) என்பது தெரியவந்தது.


இதையடுத்து பெற்றோருக்கு போன் மூலம் அழைப்பு கொடுத்து காவல் நிலையம் வரவழைத்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெய்ஙகொண்டம் பகுதியில் தலைமுடிகள் வாங்கும் தொழில் செய்து வருவது தெரியவந்தது. மேலும்,மாதம் ஒரு முறை ஊருக்கு செல்வதாகவும், தங்களது கணவர்கள் ஆந்திராவில் இருப்பதாகவும் குழந்தைகளின் தாயார்கள் தெரிவித்தனர். இதையடுத்து கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு மாவட்ட ஏடிஎஸ்பி அசோக்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், சிறுமிகள் 3 பேரும் அரியலூர் மாவட்ட குழந்தைகள் உரிமை ஆணைய அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News