ஜெயங்கொண்டம் அருகே கோவில் பிரச்சினையில் மக்கள் சாலை மறியலால் பரபரப்பு

ஜெயங்கொண்டம் அருகே கோவில் கும்பாபிஷேக பிரச்சினை தொடர்பாக சாலை மறியல் செய்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-01-21 06:54 GMT

சாலை மறியல் போராட்டம் நடத்திய மக்கள்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கடாரம்கொண்டான் கிராமத்தில் ஆண்டவர் கோவிலுக்கு சொந்தமான ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் 20 சென்ட் அளவில் ஆண்டவர் திருக்கோயில் கட்டப்பட்டு வழிபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த மூன்றாண்டு காலமாக கிராம மக்களிடையே வரிவசூல் செய்து கோவில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் கோவிலுக்கு வர்ணம் பூசப்பட்டு அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் இன்று கோவில் கும்பாபிஷேகம் நடத்த இருந்த நிலையில் பக்கத்து ஊரான பெரியபாளையம் கிராம மக்கள் தங்களுக்கு கும்பாபிஷேகம் பற்றி எந்த தகவலும் கொடுக்கவில்லை என கூறி காவல் துறை மூலம் ஆண்டவர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு தடை வாங்கியுள்ளனர்.

இதனை அறிந்த கடாரம்கொண்டான் கிராம மக்கள் கும்பாபிஷேகத்திற்கு தடை விதித்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆமணக்கம் தோண்டி பேருந்து நிலையத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில் பயிற்சி டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் தலைமையில் போலீசார் சமாதானம் பேசி பார்த்தும் உடன்படாததால் வலுக்கட்டாயமாக மறியலில் ஈடுபட்டவர்களை தூக்கி பேருந்தில் ஏற்றியதால் பரபரப்பு காணப்பட்டது.


இதனையடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறையினர் நாளை  மாலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரிவித்ததையடுத்து இரண்டு மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் கைவிடப்பட்டது.

மாலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தங்களுக்கு கோவில் பாத்தியப்பட்டது என்பதற்காக தங்களிடம் இருந்த ஆவணங்களை கோட்டாட்சியரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.மேலும் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்க வேண்டுமெனவும் கடிதம் அளித்தனர்

கடிததத்தை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் மாவட்ட ஆட்சியருக்கு இது குறித்து தகவல் அளிப்பதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News