கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலய மாசிமக பிரம்மோற்சவ தேர்திருவிழா

உலகப் பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மாசிமக பிரம்மோற்சவத்தில் இன்று தேர்திருவிழா நடைபெற்றது.

Update: 2022-02-16 08:57 GMT

உலகப் பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மாசிமக பிரம்மோற்சவ தேர் திருவிழா நடைபெற்றது


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே யுனெஸ்கோவால் உலக புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட உலகப் பிரசித்திபெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மாசிமகத் திருவிழா கடந்த 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த விழாவானது தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்று வருகிறது. ஸ்ரீ பிரகன்தநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ பிரகதீஸ்வரர் மற்றும் விநாயகர் முருகன் சுவாமி சிலைகள் அலங்காரம் செய்யப்பட்டு 9 ஆம்‌ நாள் விழாவான இன்று தேர் வீதி உலா நடைபெற்றது. சுவாமி அம்பாளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.


தேர் புறப்பாடு நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் தமிழக அரசு சார்பாக கலந்துகொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து துவங்கி வைத்தார். இதில் அறநிலையத் துறை அதிகாரிகளும் கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தினர் மேலும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி அம்பாளை தரிசித்தனர். 

பின்னர் கர்ப்பகிரகத்தில் உள்ள லிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று மலர் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பெண்சிவனடியார்கள் மற்றும் பொது மக்கள் கும்மி அடித்து சிவன் பாடல் பாடியும் வழிபாடு செய்தனர். நாளை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் பக்தர்கள் உபயத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News