கங்கைகொண்ட சோழபுரம் கணக்க விநாயகர் சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் தரிசனம்
கணக்கவிநாயர் கோவிலில் விநாயகருக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.;
கங்கைகொண்ட சோழபுரம் கணக்க விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபிரத்தில் மாமன்னர் இராஜேந்திரசோழரால் கட்டப்பட்ட புகழ்பெற்ற அருள்மிகு கணக்க விநாயகர் கோவிலுக்குள் உள்ள விநாயகருக்கு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக, விநாயகருக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் புத்தாடை அணிவிக்கப்பட்டு மாலைகளால் விநாயகர் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது, திரளான பக்தர்கள் பங்கேற்று அருள்மிகு விநாயகரை வழிபட்டனர்.
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் காரணமாக, விநாயகர் சதுர்த்தி விழாவானது வெகு சிறப்பாக கொண்டாட முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், இவ்வருடம் விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார கிராமப்புறங்களைச் சேர்ந்த பக்தர்கள் கணக்கவிநாயகர் கோவிலுக்கு வந்து, அருகம்புல் வைத்தும், கொளுக்கட்டைகளை படைத்தும் விநாயகரை வழிபட்டு சென்றனர்.
மேலும் அரியலூர் மாவட்டம் முழுவதும் நகர் மற்றும் கிராமப்புறங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்தும் பக்தர்கள் வழிபாடு செய்தவண்ணம் உள்ளனர்.