இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி ஆதிதிராவிடர் இன மக்கள் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசால் வழங்கப்பட்ட 98 இலவச வீட்டு மனை பட்டாவை அளவீடு செய்து வழங்க கோரி ஆதிதிராவிடர் இன மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Update: 2021-09-13 07:59 GMT

வானதிரையன் பட்டினம் ஆதிதிராவிடர் பொது மக்கள் தமிழக அரசால் வழங்கபட்ட 98 இலவச வீட்டு மனை பட்டாவை அளவீடு செய்து வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


ஜெயங்கொண்டம்  அருகே தமிழக அரசால் வழங்கபட்ட 98 இலவச வீட்டு மனை பட்டாவை அளவீடு செய்து வழங்க கோரி, வாணதிரையன்பட்டினம் ஆதிதிராவிடர் இன மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வாணதிரையன்பட்டினம் கிழக்கு காலனி தெரு, ஆதிதிராவிடர் இன மக்களுக்கு ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் 98 இலவச வீட்டு மனை பட்டா 2007 -இல் வழங்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுநாள் வரை அளவீடு செய்து வீடு வழங்கவில்லை. இதைக் கண்டித்து,  வாணதிரையான்பட்டினம்  கிராம நிர்வாக அலுவலகம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,  100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொது மக்களுடன் ஆதிதிராவிடர் நலவட்டாட்சியர் அன்புசெல்வன் பேச்சு வார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக, பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் சின்னதுரை கூறுகையில், தொடர்ந்து இடம் அளவீடு செய்யாமல் அதிகாரிகள் அலைக்கழிப்பு செய்து வருகின்றனர். ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஒரு வாரத்திற்குள் தீர்வு காணப்படும் என கூறி அனுப்பி வைத்து விடுகின்றனர். ஆனால், அதற்கான தீர்வு 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் தற்போது வரை தீர்வு கிடைக்கவில்லை. இதைக்கண்டித்து தற்போது கிராம நிர்வாக அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அதிகாரிகள் ஒரு வாரத்திற்குள் அளவீடு செய்யவில்லை என்றால், அடுத்த வாரம் ஆதிதிராவிடர் வட்டாட்சியர் அலுவலகத்தை இழுத்து மூடும் போராட்டம் நடத்தப்படும்  என தெரிவித்தார்.

Tags:    

Similar News