ஜெயங்கொண்டம் அருகே நகைக்காக 2 பெண்கள் படுகொலை

ஜெயங்கொண்டம் அருகே நகைக்காக 2 பெண்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-10-23 03:18 GMT
கொலை செய்யப்பட்ட பெண்களின் உறவினர்கள் கதறி அழுத காட்சி.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியபாளையம் கிராமம்  மேலத் தெரு தண்டபாணி மனைவி கண்ணகி (50). இவரும் தெற்கு தெருவை சேர்ந்த கலைமணி மனைவி மலர்விழி (29) ஆகிய இருவரும் ஊருக்கு வெளியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தைலமரக்காட்டில் தற்போது பெய்துள்ள மழையினால், காட்டில் முளைத்த காளான்களை பறிக்க சனிக்கிழமை காலையில் சென்றனர். 

ஒரே சைக்கிளில் இருவரும் சென்றனர். காட்டு பகுதியில் ஓரிடத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு பின்னர் நடந்து தைலமரக் காட்டில் ஆட்கள் இல்லாத இடத்தில் காளான்களை பறித்தனர். நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. காளான் பறிக்கச் சென்ற இருவரும் வராததால் அவர்களது குடும்பத்தினர் அவர்களைதேடிச்சென்றனர். அப்போது பெரியபாளையத்தில் இருந்து கழுவந்தோண்டி செல்லும் சாலையில் சைக்கிளை நிறுத்திவிட்டு காட்டின் உள்ளே இருவரும் சென்றுள்ளது தெரியவந்தது. சைக்கிள் நிறுத்தி இருந்த  இடத்திலிருந்து நடைபாதை வழியாக அவர்களது குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு 2பெண்களும்  ரத்தவெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.  இருவரும் முகங்கள்  சிதைக்கப்பட்டு அறிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தனர்.

மேலும் பெண்கள் இருவரும் அணிந்திருந்த தங்க தாலிக்கொடி உள்ளிட்ட நகைகள் அனைத்தையும் காணவில்லை. அவைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது  பற்றி  உடனடியாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு ஜெயங்கொண்டம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். 

சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன. மோப்ப நாய் சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் தடய அறிவியல் துறையினர் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். இரண்டு பெண்களின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி  உடற்கூறு ஆய்வுக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தைலமரக்காட்டில் பெண்கள் இறந்து கிடந்த இடத்திற்கு வந்த உறவினர்கள் படுகொலையின் கொடூரத்தை பார்த்து உறைந்து போயினர். கதறிதுடித்து அழுதனர்.

அக்கம் பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்களும் சம்பவ இடத்தில் குவித்ததால் அதிக அளவில் போலீசார் வரவழைக்கப்பட்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு சென்ற ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அங்கிருந்த போலீசாரிடம் விரைவில் விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கண்டுபிடிக்க கேட்டுக் கொண்டார்.

கொலை நடந்த  இடமான தைலமரக்காட்டில் வாலிபர்கள்  அடிக்கடி ஒன்றாக கூடி மது குடிப்பார்கள்.  அதுபோன்று அங்கு  வாலிபர்கள் மதுஅருந்தி கொண்டிருந்தபோது அங்கு வந்த பெண்களை நகைக்காக  கொலை செய்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். மேலும் படுகொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தவர்களின் முகங்கள் சிதைக்கப்பட்டுள்ளதால் வேறு ஏதாவது காரணங்கள் உள்ளனவா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.  ஒரே இடத்தில் இரண்டு பெண்கள் படுகொலை செய்யப்பட்ட  சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News