கவர்னர் ஆவாரா நாட்டாமை? குறுக்கே புகுந்த தமிழிசை..!

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த நாட்டாமை சரத்குமார் தனக்கு கவர்னர் பதவி வேண்டும் என விண்ணப்பித்துள்ளார்.

Update: 2024-07-01 03:23 GMT

சரத்குமார் தனது மனைவியுடன் தமிழிசை சௌந்தர்ராஜனை சந்தித்த படம் (கோப்பு படம்)

தமிழக சினிமாவில் நன்கு அறியப்பட்டவர் சரத்குமார். சினிமாவில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், எல்லோரும் அறியும் ஒரு ஹீரோவாக வலம் வந்தார். இதே ஆசையில் அரசியலில் அடியெடுத்து வைத்தவர், பல கட்சிகளில் பயணித்து முடிவில் தனிக்கட்சி தொடங்கினார்.

திடீரென ஒரு நாள் நள்ளிரவு 2 மணிக்கு தன் மனைவி ராதிகாவை எழுப்பி, ஆலோசனை நடத்தி, கட்சியை பா.ஜ.க.,வுடன் இணைத்தார். கடந்த லோக்சபா  தேர்தலில் தன் மனைவியை விருதுநகர் லோக்சபா தேர்தலில் பா.ஜ.க., வேட்பாளராக நிறுத்தினார். ஆரம்பம் முதலே பிரசாரத்திலும், ஓட்டு சேகரிப்பிலும் சொதப்பி பெரும் தோல்வியை சந்தித்தார்.

அதன் பின்னர், நான் ஒரு கட்சித்  தலைவர், உங்களை நம்பி எனது கட்சியை இணைத்திருக்கிறேன். எனக்கு ஏதாவது பதவி தாருங்கள் என பா.ஜ.க., முக்கிய பிரமுகர்களிடம் கேட்டு வந்தார். இந்நிலையில் தன் மகள் திருமணத்திற்கு முக்கிய பிரமுகர்களை நேரில் சென்று அழைத்து வருகிறார் நாட்டாமை சரத்குமார். அப்போது மத்திய மந்திரி அமித்ஷாவை பார்த்த போது எனக்கு ஏதாவது ஒரு மாநிலத்தில் கவர்னர் பதவி கொடுங்கள்.

நாடார் வகுப்பைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் இதற்கு முன்பு தெலுங்கானா கவர்னராக இருந்தார். அவர் அந்தப் பதவியில் இருந்து விலகியதால் அந்த இடம் காலியாக உள்ளது அதை எனக்குத்  தாருங்கள் என கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த அமித்ஷா, கவர்னர் பதவிக்கு வாய்ப்பு குறைவு, ஒரு வேளை வாய்ப்புகள் கூடி வந்தால் மத்திய மாந்திரியாக்குகிறேன், பார்ப்போம் என்று கூறியுள்ளார். இது பற்றி கேள்விப்பட்டவுடன் தமிழிசை சௌந்தர்ராஜன் விழுந்து அடித்து கொண்டு டெல்லி சென்று அமித் ஷாவை பார்த்தார்.

அப்போது அவர் நாட்டாமை என அழைக்கப்படும் சரத்குமார் முழு நேர அரசியல்வாதி அல்ல. அவ்வப்போது அரசியலுக்கு வந்து போவார். மற்றபடி பாரம்பரியமிக்க அரசியல் பிரமுகரும் அல்ல. எனவே எனது கோட்டாவை அவருக்கு தரக்கூடாது. மேல்சபை எம்பி ஆக்கி என்னை மத்திய அமைச்சர் ஆக்குங்கள் அல்லது மறுபடியும் என்னை ஒரு மாநிலத்திற்கு கவர்னர் ஆக்குங்கள் என்று கூறியுள்ளார்.

இது பற்றி பா.ஜ.க., நண்பர்கள் சிலர் கூறியதாவது: நாட்டாமை சரத்குமாரும், தமிழிசை சவுந்திரராஜனும் தங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பினை மிகச்சரியாக பயன்படுத்தவில்லை. மொத்தத்தில் இரண்டுமே வேஸ்ட். இவர்களை கவர்னர் ஆக்குவதால் பாரதிய ஜனதாவுக்கு எந்த பயனும் கிடைக்காது.

இது தவிர கவர்னர் பதவிக்கு பாரதிய ஜனதாவில் வேறு நல்ல ஆளே கிடையாதா? பொன்.ராதாகிருஷ்ணன் கூட இருக்கிறார் அவருக்கு தரலாம். சரத்குமார் சினிமாவிலோ, அரசியலிலோ எதனை பெரியதாக சாதித்துள்ளார். நாட்டாமை... சூரிய வம்சம் என பழைய கதையை வைத்து இன்னும் ஓட்டிக் கொண்டிருக்கிறார். விருதுநகரில் ராதிகாவை வெற்றி பெற வைத்திருந்தால், நிச்சயம் ஏதாவது பெரிய பதவி அவரைத்  தேடி வந்திருக்கும். அங்கு பெரிய அளவில் கோட்டை விட்டு விட்டார். இப்போது பதவி கேட்டால் எப்படி தருவார்கள் என்றனர்.

இந்நிலையில் இது குறித்து மாற்றுக்கட்சியினர் சிலர் கருத்து தெரிவித்த போது, ‘பா.ஜ.க., தான் ஆட்சியை பிடிக்காத மாநிலங்களில் கவர்னர் மூலம் ஆட்சி நடத்தும். இதற்கு தமிழகத்தில் மிகவும் சரியான ஒரு ஆள் இருக்கிறார். அது அவர்களுக்கும் தெரியும். அவரை கவர்னராக ஆக்கினால், அந்த மாநில அரசை உண்டு, இல்லை என ஆக்கி விடுவார். எது எப்படியோ தமிழகத்திற்கு ஒரு கவர்னர் பதவியும், மத்திய அமைச்சர் பதவியும் இருக்கும் என இதன் மூலம் தெரியவந்துள்ளது என்றனர்.

Tags:    

Similar News