நாட்டுப்பற்றை பற்றி காங்கிரஸ் பாடம் நடத்துவதா? பா.ஜ.க. சாடல்

நாட்டுப்பற்று என்றால் என்னவென்று காங்கிரஸ் கட்சி பா.ஜ.கவிற்கு பாடம் நடத்த வேண்டாம் என பா.ஜ.க.வினர் கொந்தளிக்கின்றனர்.

Update: 2024-06-27 04:32 GMT

தேனி மாவட்ட பா.ஜ.க., வர்த்தக அணி தலைவர் கே.கே.ஜெயராம் நாடார்.

பா.ஜ.க., வர்த்தக அணி மாவட்ட தலைவர் ஜெயராம்டார் கூறியதாவது: நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜ.க., தனிப்பெரும் கட்சியாக 240 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. பல நுாறு தொகுதிகள் சொற்ப ஓட்டுக்களில் கையை விட்டு போய் விட்டன. காரணம் வெயில் காரணமாக மக்கள் ஓட்டுப்போட வரவில்லை. ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்து விட்டது.

ஓட்டுப்பதிவு சதவீதம் மட்டும் அதிகரித்திருந்தால் பா.ஜ.க., தனித்து 300ஐ தாண்டியிருக்கும். தவிர காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் இந்த தேர்தலில் கபடநாடகம் ஆடி வருகின்றன. பா.ஜ.க.,வுக்கு தேசப்பற்று இல்லை என கூறி வருகின்றன. இதனை கேட்டால் சிரிப்பு தான் வருகிறது.

காங்கிரஸ் கட்சியை விட, பா.ஜ.க.,வுக்கு தேசப்பற்று அதிகம். குறிப்பாக ஆட்சியில் இருந்தால் கூட காங்கிரஸ் கட்சிக்கு தேசப்பற்று முழுமையாக வருமா என்பது சந்தேகம் தான். ஆனால் ஆட்சியில் இருந்தாலும், இல்லா விட்டாலும் பா.ஜ.க.,வுக்கு தேசப்பற்று உண்டு. இதனை முந்தைய காங்கிரஸ் தலைவர்கள் ஏற்றுக் கொண்டு உள்ளனர்.

இதற்கு ஒரு சிறிய உதாரணத்தை நான் சொல்கிறேன். இதனை கேட்டால் தான் பா.ஜ.க.,வின் தேசப்பற்று என்னவென்று இப்போதைய தலைமுறைக்கு புரியும். தவிர பா.ஜ.க.,வின் தேசப்பற்று மீது முந்தைய காங்கிரஸ் தலைவர்கள் வைத்திருந்த நம்பிக்கையும் புரியும். அதற்காக இந்த உதாரணத்தை சொல்கிறேன்.

இந்திய பிரதமராக நரசிம்மராவ் செயல்பட்ட போது எதிர்கட்சி தலைவராக வாஜ்பாய் செயல்பட்டார். அக்காலகட்டத்தில் வல்லரசு நாடுகளில், ரஷ்யா மட்டுமே இந்தியாவிற்கு நட்பு நாடாக செயல்பட்டது. அப்போது, காஷ்மீரில் தனிவாக்கெடுப்பு நடத்தவேண்டுமென்ற மசோதாவை ஐநாவில் வல்லரசு நாடான அமெரிக்கா தாக்கல் செய்தது. அந்த நாடு பாகிஸ்தானின் தூண்டுதலால் இப்படி ஒரு மசோதாவை தயார் செய்தது.

அந்த மசோதாவின் மீதான விவாதத்தில் இந்திய பிரதிநிதிகள் பேசினர். ஆனால், இந்திய பிரதிநிதிகளின் வாதங்கள் சரியாக அமையாத காரணத்தால் அந்த மசோதா வெற்றி பெற்று விடும் என்பதையும், அடுத்த இருநாட்கள் ஐநா-விற்கு விடுமுறையாக இருப்பதால் அதற்குள்ளாக வலிமையான கருத்துக்களையுடைய இந்தியப் பிரதிநிதிகள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்னும் தகவல் இந்திய ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக இந்திய ஜனாதிபதி சங்கர்தயாள் சர்மாவும், பிரதமர் நரசிம்மராவும் ஆலோசித்தனர். ''ஐநா விவாதத்தில் பங்கேற்பதற்கு எதிர்கட்சித் தலைவரான வாஜ்பாயே சிறந்தவர்'' என்னும் நரசிம்மராவின் முடிவை ஏற்று, குலு மணாலியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வாஜ்பாயை, தனி விமானத்தில் ஐநா கூட்டத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.

வல்லரசு நாடுகளில் அமெரிக்கா மற்றும் சீனா மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்த நிலையில். ரஷ்யா மட்டுமே மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தது. பிரான்சும் பிரிட்டனும் முடிவெடுக்காத நிலையில் இருந்தன. இந்த நிலையில் ஐநா விவாதத்தில் பங்கேற்க வருகின்ற வாஜ்பாயின் வருகையை அமெரிக்க பத்திரிகைகள் முக்கியத்துவமாகக் கருதியது. பல பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

அமெரிக்காவில் வந்திறங்கிய வாஜ்பாயிடம், அமெரிக்க பத்திரிகைகள் பேட்டி எடுக்க போட்டியிட்டன. வாஜ்பாயி - "எனது நாட்டிலுள்ள தீவிரவாதத்துக்கு எதிராக எங்கள் அரசு நடவடிக்கை எடுப்பதை வல்லரசு நாடுகள் எதிர்ப்பது தவறு. அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டிருக்கின்ற மசோதாவை வல்லரசு நாடுகள் ஆதரித்தால், இந்தியாவிலிருந்து காஷ்மீர் பிரிவதற்கு காரணமாக இருக்கும் நாடுகளிலுள்ள தீவிரவாதிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று தெளிவாகக் குறிப்பிட்டார்.

அமெரிக்க பத்திரிகைகள் - "எதிர்கட்சித் தலைவரான உங்கள் முடிவை இந்திய அரசு ஏற்குமா"..? - என்று வாஜ்பாயிடம் கேள்வி எழுப்பினர். வாஜ்பாயி - "நான் எதிர்கட்சித் தலைவராக இங்கு வரவில்லை. இந்தியாவின் தலைமைப் பிரதிநிதியாக வந்துள்ளேன். ஏற்கனவே இங்கு வந்துள்ள இந்திய அமைச்சர்கள் எனக்கு கட்டுப்பட்டவர்கள். எனது முடிவே இந்தியாவின் முடிவு" என்று கூறினார்.

வாஜ்பாயின் பத்திரிகை பேட்டி வெளியான சில மணி நேரங்களில் பிரான்சும், பிரிட்டனும் இந்தியாவிற்கு ஆதரவாக நேசக்கரம் நீட்டின. காரணம், அவ்விரு நாடுகளிலும் அப்போது தீவிரவாதம் தலைதூக்கியிருந்தது.

அடுத்த நாள், இந்தியாவிற்கு எதிராக தான் கொண்டுவந்த மசோதா தோல்வியடைந்து விடுமென்பதை உணர்ந்த அமெரிக்கா அந்த மசோதாவை வாபஸ் வாங்கியது.

மாபெரும் வெற்றியாளராக இந்தியா திரும்பிய வாஜ்பாயை வழக்கத்திற்கு மாறாக விமான நியைத்திற்கு சென்று இந்திய ஜனாதிபதி வரவேற்றார். இந்தியாவை எந்த கட்சி வேண்டும் என்றாலும் ஆட்சி செய்யலாம். அந்த ஆட்சியை குறை சொல்லலாம். ஆனால் ஆளும் கட்சியை விமர்சிப்பதற்காக இந்தியாவை விமர்சிக்க கூடாது.

பாஜக அரசை பாசிச அரசு என்றும், ஒன்றிய அரசு என்றும் விமர்சிக்கும் இதர கட்சியினர் சற்று சிந்திக்க வேண்டும். பா.ஜ.க., தேசப்பற்றுக்கு இணை வேறு எந்த கட்சிக்கும் கிடையாது.

ராகுல்காந்தி பழைய வரலாறு தெரியாமல் பேசி வருகிறார். தமிழகத்தில் உள்ள பா.ஜ.க., தவிர்த்த மற்ற கட்சி தலைவர்களுக்கும் எங்களின் தேசப்பற்று, நிலைப்பாடு பற்றிய முழுமையான தெளிவு இல்லை. இதனால் எங்களை விமர்சிப்பதாக கூறி பல தவறான தகவல்களை வெளியிடுகின்றனர். பாஜவை விமர்சிக்கலாம். மோடியை விமர்சிக்கலாம். ஆனால் ஜெய்ஹிந்த் என்ற வீரமுழக்கத்தை விமர்சிக்க கூடாது என்று கூறினார்.

Tags:    

Similar News