கச்சத்தீவை மீட்க வேண்டும்:பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

கட்சத்தீவை மீட்டெடுத்து உரிமையை நிலைநாட்ட இது தகுந்த தருணம் என்று, சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Update: 2022-05-26 13:30 GMT

சென்னை விழாவில் நலத்திட்டங்களை, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில், தமிழகத்தில் மொத்தம் 31 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான 11 மக்கள் நலத்திட்டங்ளை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

இந்திய நாட்டின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்களிப்பு முக்கியமானது. தமிழகத்தின் வளர்ச்சி திராவிட மாடல் வளர்ச்சி. பல்வேறு துறைகளில் தமிழகம் முன்னணி வகிக்கிறது. மத்திய அரசின் வரி பங்களிப்புக்கு தமிழகம் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சி திராவிட மாடல் ஆகும்.

விழா மேடையில் பிரதமர் மோடி, ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர்.  

தமிழ்நாட்டின் பங்களிப்புக்கு ஏற்ப, நிதி ஒதுக்கீடு அதிகரிக்க வேண்டும். வரியை பகிர்ந்தளிப்பதே உண்மையான கூட்டாட்சி முறையாகும். சாலை திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு காலப்போக்கில் குறைக்கப்படுகிறது.

விழாவில் கலந்து கொண்ட தமிழக அமைச்சர்கள். 

இந்திக்கு நிகராக அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும். நீட் விலக்கு சட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். கச்சத்தீவை மீட்டெடுக்க இதுவே சரியான தருணம். நீட் நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை ₹14,000 கோடியை விரைந்து வழங்க வேண்டும். நவீன தமிழ்நாட்டின் தந்தை கலைஞர் சொன்னதுபோல 'உறவுக்கு கைகொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்' என்பதாகும்.

எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்கை எட்ட, மக்கள் நலத்திட்டங்களை இணைந்து செயல்படுத்துவோம். தமிழ்நாடு அரசின் விழாவில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடிக்கு நன்றி. இவ்வாறு, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Tags:    

Similar News