இடைத்தேர்தல் புறக்கணிப்பை ரசிக்காத அதிமுக தொண்டர்கள்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்ற அ.தி.மு.க வின் முடிவை அக்கட்சி தொண்டர்கள் விரும்பவில்லை.

Update: 2024-06-20 04:46 GMT

எடப்பாடி பழனிசாமி (கோப்பு படம்)

மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் விபத்தில் சுமார் 15 பேர் பலியாகியிருக்கிறார்கள், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள்.

தினமும் கோடிக்கணக்கானவர்கள் பயணிக்கும் ரயில் போக்குவரத்தில், மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தவேண்டியிருப்பதையே இந்த விபத்துகள் சுட்டிக்காட்டுகின்றன. இது பற்றி எடப்பாடி வாய்திறக்கவில்லை.

ஒரே நேரத்தில் அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் சவால் விடும் விதமாக கொடிசியா மைதானத்தில் முப்பெரும் விழாவை நடத்தி முடித்திருக்கிறது தி.மு.க. முதல்வர் ஸ்டாலினும், ராகுல் காந்தியும் பங்கேற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டம் நடந்த செட்டிப்பாளையம் எல் அண்ட் டி சாலையில் நிகழ்ச்சியை நடத்தத்தான் முதலில் திட்டமிருந்தனர். மழைக்காலம் என்பதால், விழாவை கொடிசியா மைதானத்துக்கு மாற்றியிருக்கிறார்கள்.

இதனால், வெளியூர்களிலிருந்து வந்தவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறினார்கள். ஆனாலும், ‘கூட்ட ஏற்பாடுகள் தொடங்கி விருந்தினர்களை நல்லபடியாக கவனித்துக்கொண்டது வரையில் அமைச்சர் முத்துசாமி, தலைமையிடம் நல்ல பெயரையும் வாங்கி விட்டார்’ என்கிறார்கள்.”

“செந்தில் பாலாஜியின் துறையை மட்டுமல்ல... கட்சியில் அவரது இடத்தையும் கைப்பற்ற நினைக்கிறாரா முத்துசாமி?” “அவர் நினைக்கிறாரோ இல்லையோ... செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள். வரும் ஜூலை மாதத்துக்குள் எப்படியும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கும் அவர்கள், ‘அதுவரையில் கட்சியில் செந்தில் பாலாஜிக்கான இடம் மிச்சமிருக்குமா?’ என்று சந்தேகப்படத் தொடங்கி விட்டார்களாம்.

‘கொங்கு மண்டலத்தில் தேர்தல் பரப்புரை செய்த போது, முதல்வர் ஸ்டாலினும் உதயநிதியும் போகுமிட மெல்லாம் ‘செயல்வீரர், சகோதரர், செந்தில் பாலாஜியின் ஆதரவு பெற்ற வேட்பாளர்’ என்றெல்லாம் அவரது பெயரைப் பயன்படுத்தினார்கள். ஆனால், கோவை முப்பெரும் விழாவில் ஒரு முறைகூட அவரது பெயரைச் சொல்லவில்லை.

அதுகூடப் பரவாயில்லை. அமைச்சர் முத்துசாமியை, `செயல்வீரர்’ என்று முதல்வர் சொல்வார் என நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. கட்சிக்காக யார் செலவு செய்கிறார்களோ, அவர்கள் தான் செயல்வீரர்போல...’ எனப் புலம்பித் தீர்க்கிறார்கள் பாலாஜியின் ஆதரவாளர்கள்.”

“ஐயோ பாவம்... அது சரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை எடப்பாடி புறக்கணித்திருப்பதைக் கட்சியின் சீனியர்கள் பலரும் ரசிக்கவில்லையாமே?”

“ரசிக்கவில்லையா... கடும் கோபத்தில் இருக்கிறார்கள். ‘ஆளுங்கட்சியை எதிர்ப்பவர்கள் தான் எதிர்க்கட்சியாக இருக்க முடியும். அதையும், `மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்’ என்று விட்டு விட்டால், அப்புறம் எதற்குத் தனிக்கட்சி...? பொதுச்செயலாளர் பதவி?’  என்று கொதிக்கிறார்கள் அவர்கள்.

‘நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் வி.சி.க 72,188 வாக்குகளும், அ.தி.மு.க 65,365 வாக்குகளும், பா.ம.க 32,198 வாக்குகளும் பெற்றிருந்தன. அங்கே வேலை செய்த கட்சியினரையும், வாக்களித்த மக்களையும் மதித்தாவது இடைத்தேர்தலில் போட்டியிடும் முடிவை எடப்பாடி எடுத்திருக்க வேண்டாமா...?  அ.தி.மு.க வாங்கிய ஓட்டுகளில் பாதி ஓட்டுகளை வாங்கிய பா.ம.க-வுக்கு ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்?’ என்பதே அவர்களின் ஆதங்கம்.

‘பா.ஜ.க போட்டியிட்டால் டெபாசிட்கூடத் தேறாது. எனவே, பா.ம.க-வைப் போட்டியிடச் சொல்லி டெல்லியிலிருந்து உத்தரவு போட்டிருக்கிறார்கள். அதன் பிறகே வேட்பாளரை அறிவித்திருக்கிறது தைலாபுரம்’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். ‘எல்லாம் சரி... அ.தி.மு.க ஏன் தேர்தலிலிருந்து ஒதுங்கிக்கொண்டது?’ என்று கேட்கிறார்கள் அ.தி.மு.க-வின் அடிமட்டத் தொண்டர்கள்.”

“நியாயமான கேள்விதானே... எதற்காக இப்படியொரு முடிவை எடுத்தாராம் எடப்பாடி?”

“இடைத்தேர்தல் தொடர்பாக ஜூன் 15-ம் தேதி எம்.ஜி.ஆர் மாளிகையில் நடந்த சம்பிரதாய ஆலோசனைக் கூட்டத்தில், ‘தேர்தலைப் புறக்கணிக்கப்போகிறோம்’ என்று எடப்பாடி தனது முடிவை அறிவித்த போது பலருக்கும் அதிர்ச்சி. ‘போட்டியிடவில்லையென்றால் நன்றாக இருக்காதே’ என்று சில சீனியர்கள் சொல்ல, ‘2009-ல் அம்மாவே இடைத்தேர்தலைப் புறக்கணித்திருக்கிறார்கள்’ எனச் சொல்லி அவர்களை ஆஃப் செய்து விட்டாராம் எடப்பாடி.

‘இந்த முடிவு சுயமாக எடுத்ததுபோலத் தெரியவில்லை. எங்கிருந்தோ வந்த அழுத்தத்துக்குப் பயந்து கொண்டு, நம்முடைய வாக்குகளை மற்றவர்களுக்கு மடைமாற்றப் பார்க்கிறார் அவர்’ என முணுமுணுத்தவாறே கிளம்பிச் சென்றிருக்கிறார்கள் சீனியர்கள்.

“அமித்ஷா, தமிழிசையுடன் பேசும் வீடியோ இந்தியா முழுவதும் வைரலாகி அமித் ஷாவுக்கு எதிரான விவாதமாக மாறியது. இதைச் சமாளிக்க முடிவெடுத்த டெல்லி, ‘உங்களால் தானே இந்தப் பிரச்னை உருவானது... நீங்களே பேசி சமரசம் செய்யுங்கள்’ எனக் குட்டுவைத்திருக்கிறது. அதன் பிறகே சாலிகிராமத்திலுள்ள தமிழிசையின் வீட்டுக்குப் பறந்திருக்கிறார் அண்ணாமலை.

வீட்டுக்குள் நுழைந்தது முதல், ‘அக்கா... அக்கா...’ என ஒரே பாசமழைதானாம். சமூக வலைதளங்களில் தமிழிசைக்கு எதிராகப் பதிவிடப்பட்ட கருத்துகளுக்கும் தனக்கும் எந்தத் தொடர்புமில்லை எனச் சாதித்திருக்கிறார் மலை. அமைதியாகக் கேட்டுக்கொண்ட தமிழிசை, ‘சரிதான் தம்பி... அப்படி கருத்து பதிவிடுறவங்க கட்சியில இருந்தா, அவங்க மேலே நடவடிக்கை எடுக்கணும். இல்லைன்னா, போலீஸ்ல புகாராச்சும் கொடுக்கணும். பேசவிட்டு வேடிக்கை பார்க்குறது தலைமைக்கு அழகா..?’ என்று சுருக்கென கேட்கவும், மலை விக்கித்துப் போனாராம்.”

“சரிதான்...”

“எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக்கொண்ட அண்ணாமலை, ‘நடந்தது நடந்து போச்சுக்கா... இனிமே, ஒண்ணா சேர்ந்து பணியாற்றுவோம்’ என்றபடி கிளம்பி விட்டாராம். மலை வந்து சென்ற பின்னர், கட்சியின் சீனியர்கள் பலரிடமிருந்தும் தமிழிசைக்குப் போன் கால்கள் பறந்திருக்கின்றன. ‘சாதிச்சுட்டீங்க அக்கா... உங்ககிட்டதான் அந்தாளு பணிஞ்சிருக்காரு. மாநிலத் தலைவரான இந்த மூணு வருஷத்துல, சக்தி கேந்திர கூட்டங்கள்ல கூட அவர் கலந்துக்கிட்டது கிடையாது. யாரு வேலை பார்க்கிறா... யாரு டபாய்க்கிறான்னுகூட அவருக்குத் தெரியாது. மேலிடத்துத் தொடர்பை வெச்சுக்கிட்டு பம்மாத்து காட்டுனவருக்கு மணி கட்டிட்டீங்க’ எனப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள்.

இது ஒருபுறமிருக்க, ‘எல்லாம் நடிப்பு. டெல்லி கண்டிப்புடன் சொன்னதால்தான், இந்தச் சந்திப்பு வேண்டா வெறுப்பாக நடந்திருக்கிறது. இருவருக்குமிடையே வெடித்திருக்கும் பனிப்போர் இப்போதைக்கு ஓயாது’ என்கிறார்கள் உள்விவகாரங்களை அறிந்தவர்கள்.

Tags:    

Similar News